Friday 11 March 2011

கண்மணி குணசேகரனின் நடுநாட்டு சொல்லகராதி

‘விருத்தாசலம், நெய்வேலி, வடலூர், கடலூர், பண்ருட்டி ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய, நடுநாடு என்று சொல்லப்படுகின்ற இடங்களில் வாழும் மக்களின் பயன்பாட்டில் உள்ள பல்வேறு சொற்களையும் சேகரித்து, அதன் பொருள் பயன்பாட்டுடன் தந்துள்ளார் கண்மணி குணசேகரன்’ என்கிறது ‘விருபா‘ .
பதிப்பகம் : தமிழினி  . இந்த அகராதி பற்றிய விமர்சனம் வேண்டுபவர்கள் பிரம்மராஜனின் ‘நான்காம் பாதை’ 2ஆம் இதழைப் பார்க்கவும். பழனிவேலு எழுதியிருக்கிறார். நான் பதிவது ‘கண்மணி குணசேகரன் : சொற்களைத் தேடி ஒரு பயணம்’  – என்ற தலைப்பில் வந்த [தினகரன் (1/2/2009) , 'வசந்தம்' இணைப்பிதழ்]  சிறுகட்டுரை. செந்தில்குமார் எழுதியது. எனக்கும் கூட இந்தமாதிரி அகராதி தொகுக்கும் ‘ஹாஜத்’ உண்டுங்க,  என்னா ஒன்னு, அது தமிளா இக்யாது!
மக்கள் தொ.காவில் அழகிய பெரியவன் (ஆம்பூர் பேய்களை கிழித்திருக்கும்  ‘காலணியில் நசுங்கும் தொழிலாளர்கள்‘ கட்டுரை படித்தீரா ரூமி?) , பெருமாள் முருகன், கண்மணி குணசேகரன் பேசுவதைக் கண்கொட்டாமல் பார்ப்பேன்.  கண்மணி படு யதார்த்தம், அவருடைய எழுத்து போலவே. ‘தான் கண்ட பழகிய மனிதர்களை உலகை எவ்வித சித்தாந்தப் பூச்சும் இன்றி நம் முன் வைக்கும் கண்மணி குணசேகரன்  ஒரு வித்தியாசமான படைப்பாளி. இன்னமும் ஒரு கிராமத்து விவசாயியின் பிரக்ஞையிலேயே வாழ்பவர். தன்னைச் சுற்று ஒரு ஒளி வட்டம் சுழல்வதாக எண்ணாத ஒரு தமிழ் படைப்பாளி’ என்று வெ.சா எழுதியிருப்பதை இருட்டில் நின்று வழிமொழிகிறேன்.
***
‘கண்மணி குணசேகரன் : சொற்களைத் தேடி ஒரு பயணம்
எஸ். ஆர். செந்தில்குமார்
ஓசையில்லாமால் சாதிக்கும் மனிதர்கள் கிராமப்புறங்களில் ஏராளம். அந்த வரிசையில் கண்மணி குணசேகரனையும் சேர்த்துக் கொள்ளலாம். கவிஞராகப் படைப்புலகில் அறிமுகமாகி சிறுகதை, நாவல் என தனது படைப்பின் களத்தையும் எல்லையையும் விரிவுபடுத்தி புருவம் உயர்த்த வைத்த மல்லாட்டை மனிதர் இவர். கண்மணியின் ‘நடுநாட்டுச் சொல்லகராதி’ தொகுப்பு சமீபத்தில் தமிழக அரசு விருது பெற்று அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.
கண்மணி குணசேகரனின் பேச்சில், அவரது தேடல் தென்றல் நாற்றில் நடைபயில்வதைப் போல சரளமாக வந்து விழுகிறது.  கிராமத்துப் புழுதியையும் கூடவே ஒட்டியிருக்கும் மண் வாசனையையும் உணர முடிகிறது.
“அ. குணசேகர்… இதுதான் என் பெயர். எழுத்துலகத்துக்காக எழிலாக வந்து ஒட்டிக் கொண்டது ‘கண்மணி’. விருத்தாசலம் அருகே மணக்கொல்லையில் விவசாய குடும்பத்தில் பிறந்த என்னை கவிஞனாக்கியது எது தெரியுமா? ஐ.டி.ஐ படிக்கச் செல்லும் வழியில், சாலையோர மண்ணை பூசிக்கொண்டிருந்த நொச்சிச் செடி.
‘நொச்சிச் செடியே
கண்நோயால்
நொந்து மனம் வாடுபவர்க்கு
உன் சாற்றினால்
சாடி விட்டாய்
கண்நோய்தனையே
உன் மர்மங்கள் அறியாமல்
மண்பூசி நிற்பதன் மாயமென்ன’
- இப்படித் தொடங்கிய கிறுக்கல்கள் மண்ணையும் மனிதர்களையும் பதிவுசெய்யத் தொடங்கி, கண்மணி குணசேகரன் கவிதைகள், காட்டின் பாடல், தலைமுறை கோபம் என் மூன்று கவிதை தொகுப்புகளும், உயிர் தண்ணீர், ஆதண்டார்கோயில் குதிரை, வெள்ளெருக்கு என சிறுகதைத் தொகுதிகளும், அஞ்சலை, கோரை என இரண்டு நாவல்களுமாக நீண்டது. இப்போது நடுநாட்டுச் சொல்லகராதி வெளியிட்டதன் மூலம் தொகுப்பாளனாக பரிமளிக்க வாய்ப்பு” என்கிற கண்மணி குணசேகரன் நீண்ட பெருமூச்சு விடுகிறார்.
“இது ஆறாண்டு கால உழைப்பு. இதற்கு முன் வெளிவந்த கி. ராஜநாராயணனின் கரிசல் வட்டாரச் சொல் அகராதி, பெருமாள் முருகனின் கொங்கு வட்டாரச் சொல் அகராதி ஆகியவைதான் எனக்கு ஊக்கம் தந்தவை.
மல்லாட்டை மண்ணில் சும்மார் 5 ஆயிரம் வட்டாரச் சொற்களை சேகரித்து, பல இடங்களில் பொதுவாக வழக்கத்தில் உள்ள 2 ஆயிரம் சொற்களை நீக்கிவிட்டு இத்தொகுப்பை இறுதி செய்தேன். இத்துடன் இந்த மண்ணில் இயல்பான பயன்பாட்டில் உள்ள 400 பழமொழிகள், 200 மரபுத்தொடர்களையும் எடுத்துக்காட்டுகளுடன் தந்திருக்கிறேன். வட்டாரச் சொற்கள் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வரும் இந்த கால கட்டத்தில் தக்க சமயத்தில் இதை செய்திருப்பதாக நினைக்கிறேன்.
கோக கோலாவின் வருகைதான் மொழியில் மரணம். ஆம்… மொழியை இவை சிறுகச் சிறுகச் சாக அடித்து விடுகின்றன. வழக்குச் சொற்கள் தூய்மையான தமிழ்ச் சொல்லின் மருவு. ஆனால், கோலாவின் வருகை அம்மா, அப்பாவை அழித்து மம்மி, டாடிகளை விதைத்து தமிழ் மொழியின் கழுத்தை நெரித்து விடுகிறது” என்கிற குணசேகரனின் பேச்சில் கோபம் கொப்பளிக்கிறது.
கண்மணி குணசேகரனது உழைப்பின் மகத்துவம் நாளைய சமுதாயத்துக்கு நிச்சயம் புரியும். ஒதப்பை என்கிற வட்டாரச் சொல் ஆட்டின் வயிற்றில் செரிமானம் ஆகாமல் உள்ள தழைச்சாந்தைக் குறிக்கும். அதே சமயம் நெல் வேரில் உள்ள கரையாத சேறுக்கும் ஒதப்பை என்றே பெயர். இப்படி பல வார்த்தைகள் அரிய தகவல்களோடு தொகுப்பு முழுவதும் விரவிக் கிடக்கின்றன.
ஒரு பல்கலைக்கழகமோ, மொழி ஆராய்ச்சி நிறுவனமோ செய்ய வேண்டிய பணியை தனி மனிதனாக செய்திருக்கிறார்.
**
நன்றி : எஸ். ஆர். செந்தில்குமார், தினகரன்
***
சில சுட்டிகள் :
அழிவிலாத கண்ணீர் / கண்மணி குணசேகரனின் ‘அஞ்சலை’ - ஜெயமோகன் (திண்ணை)
கண்மணி குணசேகரனின் வெள்ளெருக்கு - அய்யனார்
கண்மணி குணசேகரன் கவிதைகள் - ச.முத்துவேல்
நன்றி- ஆபிதீன் 

அழிவிலாத கண்ணீர் – கண்மணி குணசேகரனின் ‘அஞ்சலை’

ன்னுடைய ‘கண்ணீரைப் பின் தொடர்தல் ‘ என்னும் நூலில் இந்திய நாவல்களை ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது பெண்களின் கடலளவு துயரையும் மலையளவு தியாகத்தையும் வெளிப்படுத்துபவையாக அவை இருப்பதை கவனித்து எழுதியிருந்தேன். இந்தியப் பெருங்காவியங்களிலிருந்தே இம்மரபு இங்கே இருக்கிறது. சீதை, கண்ணகி என… நாட்டார் காவியங்களில்கூட காவியநாயகியர் பேரூவத்துடன் எழுந்துவருகிறார்கள், உதாரணமாக என் மனதில் வருவது மலையாளக் காவியமான’ மதிலேரிக்கன்னி ‘பின்னர், இந்தியா நவீன இலக்கியம் உருவாகி வந்தபோது மீண்டும் மீண்டும் பெண்களின் கதைகளே எழுதப்பட்டன. முதல் நாவலெனக் கருதப்படும் பங்கிம் சந்திராரின் ‘துர்கேச நந்தினி’ முதல் எத்தனை கதாபாத்திரங்கள். பலவிதமான குணநலன்கள் கொண்டவர்களாயினும் தாய்மையே தனியடையாளமாகக் கொண்டவர்கள். வாழ்க்கையின் நெருப்பில் வெந்து தணிந்தவர்கள், நீறிலிருந்து முளைத்து எழுந்தவர்கள்.எண்பதுகளில் இந்திய அளவில் தலித் இலக்கியம் உருவானபோது மீண்டும் அதே நாயகியர் முற்றிலும் புதிய ஓர் அடித்தட்டு வாழ்க்கையிலிருந்து எழுந்துவருவதையே கண்டோம். களம் மாறியது கண்ணீர் மாறவில்லை. தமிழ் தலித் இலக்கியத்தில் ஆனந்தாயி [ஆனந்தாயி -சிவகாமி] மாடத்தி [ தூர்வை,- சொ.தர்மன்] ஆரோக்கியம் [கோவேறு கழுதைகள்- இமையம்] ஆகிய கதாபாத்திரங்கள் வாசக மனதில் அழுத்தமாகப் பதிந்தவை. இவ்வரிசையில் வைக்கத்தக்கதும், இவற்றில் முதன்மையானதும் என நான் எண்ணுவது கண்மணி குணசேகரன் முன்வைக்கும் அஞ்சலையின் முகம்தான்.
@@
‘அஞ்சலை’
ஒரு இயல்புவாத நாவல். ‘உள்ளது உள்ளபடி’ என்ற புனைவுத்தோற்றத்தைக் கொண்டது. எது புறவயமாக இருக்கிறதோ அதுவே புனைவில் வரும். பாவனைகளோ, கற்பனாவாத எழுச்சியோ இல்லை.ஒரு பெண்ணின் கன்னிப்பருவம் முதல் முதிர்ந்த தாய்மைநிலை வரையிலான வாழ்க்கையை இயல்பாகச் சொல்வது. நிகழ்ச்சிகளை சிக்கல்கள் இல்லாமல் வரிசையாகச் சொல்லும் அமைப்பு கொண்டது. அதிகமும் புற நிகழ்ச்சிகளை சொல்லி அக ஓட்டங்களை தேவைக்குமட்டுமே விளக்கிச் செல்லும் ஆக்கம் இது.
ஒர் இந்தியப்பெண் அவள் வாழ்க்கையில் எதிர்கொள்ள நேரும் முக்கியமான சிக்கலிலிருந்து நேரடியாக நாவல் தொடங்குகிறது. வாழ்நாள் முழுக்க அஞ்சலை எதிர்கொள்ளப்போகும் அனைத்து இக்கட்டுகளுக்கும் துயர்களுக்கும் காரணமாக அமைவது அதுவே. அஞ்சலை மீது ஊர் ‘அலர்’ எழுகிறது. அவள் அவளுடைய சாதியில் அழகான பெண். இளமையின் துடுக்கும் தன்னம்பிக்கையும் கொண்டவள். கடுமையாக உழைக்க அஞ்சாதவள். ஆணுக்கு நிகராக நின்று வயலில் கதிரடிக்கக் கூடிய உடல் வலிமையும் மன வலிமையும் கொண்டவள்.
படாச்சி மகனுடன் ஒரு விளையாட்டு வம்புக்கு அஞ்சலை நின்றது அவளுடைய இயல்புக்கு ஏற்ற ஒன்றே. கள்ளமற்ற ஆசைகளினால் ஆன ஒரு பெண் அவள். அவளை அவள் சுற்றம் கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறது. அவளுடைய தோற்றமும் ஊக்கமும் உருவாக்கும் பொறாமையே அதற்குக் காரணம். அவள் மீதான அவதூறுகள் அவள் தாயை கதிகலங்க வைக்கின்றன. அவளுக்கு திருமணம்செய்துவைக்க முயல்கிறாள். ஆனால் கையில் காசு இல்லை. அஞ்சலை அவள் மூன்றாவது மகள். அஞ்சலையின் தம்பி படிக்கிறான். மூத்த இரு பெண்களுக்கும் மணமாகிவிட்டது. அவள் தன் இரண்டாவது பெண் தங்கமணியின் கணவனிடம் மகளுக்கு ஒரு மாப்பிள்¨ளை பார்க்கும்படிச் சொல்கிறாள்.
ஆனால் அவன் அஞ்சலையை மணக்க விரும்புகிறான். தாய்க்கு அது அதிர்ச்சியாக இருக்கிறது. ஆனால் ஆண்துணை இல்லாத நிலையில் வேறு வழியும் தெரியவில்லை. அஞ்சலையும் அதை கிட்டத்தட்ட ஏற்கிற நிலையில் அவள் அக்கா ஆங்காரமும அழுகையுமாக அதை மறுக்கிறாள். அஞ்சலை தன் அத்தானை பிடிக்கவில்லை என்று சொல்லிவிடுகிறாள்
அவனுக்கு அது ஒரு வன்மமாக ஆகிறது. ஆனால் அதை மறைத்தபடி அவனே அஞ்சலைக்கு திருமண ஏற்பாடுகள் செய்கிறான். கிழக்கு ஊரில் இருந்து ஒரு மாப்பிள்ளை வருகிறது. பணம் நகை ஏதும் கொடுக்கவேண்டியதில்லை. அஞ்சலையின் தாய்க்கு திருப்தி. கருப்பாக திடமாக பெரிய மீசையுடன் இருக்கும் மாப்பிள்ளையை அஞ்சலைக்கு மிகவும் பிடித்தும் போகிறது. ஆனால் கல்யாணத்தன்று தாலி கட்டும்போதுதான் அவள் காண்கிறாள், மாப்பிள்ளை இன்னொருவன். குள்ளமான அசிங்கமான ஒரு ஊனமுற்றவன். மாப்பிள்ளை வீட்டுக்காரர்களும் அஞ்சலையின் அத்தானும் சேர்ந்து அவளை ஏமாற்றிவிடுகிறார்கள்.
வேறுவழியில்லாமல் கணவனுடன் செல்லும் அஞ்சலைக்கு அவனது ஊர் மிகவும் பிடித்திருக்கிறது. அங்கே முந்திரி பொறுக்கியும் குளத்தில் குளித்தும் பொழுது போகிறது. ஆனால் தன்னை ஏமாற்றிய கணவனையும் வீட்டாரையும் அவளால் மன்னிக்கவே முடியவில்லை. பொருமுகிறாள். தருணம் கிடைக்கும்போதெல்லாம் ஆங்காரத்துடன் திட்டுகிறாள். அவள் கணவனை அருகே அண்டவிடுவதேயில்லை. அவன் கெஞ்சும்போதுகூட நிராகரிக்கிறாள். உண்மையில் ஏமாற்றி மணம் செய்ததில் அவனுக்கு பெரிய பங்கு ஏதும் இல்லை. அவன் அவள் மீது மையலாக இருக்கிறான்
அவள் கணவனாக எண்ணிய அந்த மீசைக்காரன் அவளுடைய கணவனின் தம்பி. அவனுக்கு ஏற்கனவே மணமாகி அவர்கள் வீட்டின் மறுபாதியில் குடியிருக்கிறார்கள். ஓர்ப்படிக்கு தன் கணவன் செய்த விஷயம் பிற்பாடுதான் தெரியவருகிறது. அஞ்சலை தன் கணவனை கைக்குள் போட்டுக்கொள்வாள் என்று அவளுக்கு பயம். கணவை மிரட்டி கண்காணித்து கைக்குள் வைத்திருக்கிறாள். அஞ்சலையை கிடைக்கும் தருணங்களில் எல்லாம் வசைபாடி அவதூறு செய்து குறுகவைக்கிறாள். தன் மனதில் முதலில் காதல் எண்ணத்தை விதைத்தவன் மீது மோகமும் அவனது உதாசீனத்தில் துயரமும் ஆவேசமுமாக இருக்கிறாள் அஞ்சலை. மனைவிக்குப் பயந்த அவன் அவளை அஞ்சி விலகி ஓடுகிறான்.
ஒரு கட்டத்தில் அவ்வாழ்வின் பொருளில்லாமையையும் அவதூறுகளின் கொடுமையையும் தாங்க முடியாமல் ஊரைவிட்டே செல்கிறாள் அஞ்சலை. வழியில் அவளது இரண்டாவது அக்கா கல்யாணியின் கண்ணில் படுகிறாள். ஏற்கனவே அஞ்சலைக்கு திருமண ஆலோசனை நிகழ்ந்தபோது தன் கொழுந்தனுக்கு அவளைக் கொடுக்கவேண்டுமென கோரியிருந்தாள். அஞ்சலையின் அம்மா அதை நிராகரித்துவிட்டாள். அப்போது தன் கொழுந்தனைக் காட்டுகிறாள் ஆறுமுகம். சிவந்த உடல் கொண்ட அழகன். அஞ்சலை மனம் அவனில் ஈடுபடுகிறது. அவனை இழந்தது எவவ்ளவு பெரிய இழப்பு என நினைக்கிறாள்.
ஆறுமுகம் ஊருக்குச் செல்லும் அஞ்சலை அங்கே தன் தாலியைக் கழற்றி வீசிவிட்டு அக்காவின் கொழுந்தனை மணம் செய்துகொள்கிறாள். சில நாள் காமத்தில் திளைக்கும் வாழ்க்கை. பின்னர் அதன் உள் விவகாரம் தெரியவருகிறது. கல்யாணியுடன் ஆறுமுகத்துக்கு கள்ள உறவு இருக்கிறது. தன் குடிகாரக் கணவனை ஒரு புழு போல அவள் நடத்தி வருகிறாள். வேறு வழி இல்லாமல் அந்த நரகத்தில் உழல்கிறாள் அஞ்சலை. அக்காவின் ஏச்சுகளையும் கொடுமைகளையும் தாங்கிக் கொண்டு கணவனின் அன்பு திரும்பும் என எதிர்பார்த்து கிடக்கிறாள். அதற்கிடையே கருவுறுகிறாள். பேணுவாரில்லாமல் அனாதை போல குழந்தையைப் பெறுகிறாள். தன்னந்தனியாக குழந்தையை வைத்துக் கொண்டு அவர்களுக்கு பணிவிடைசெய்கிறாள்
ஆனால் கல்யாணி அக்காவும் கருவுறும்போது நிலைமை மாறுகிறது. அவளை அடித்து துவைக்கிறார்கள். துன்பம் தாளாமல் தற்கொலைக்கு முயல்கிறாள். குழந்தை இருக்க அதற்கும் முடியவில்லை. ஒரு புள்ளியில் தாங்கமுடியாமலாகி மீண்டும் குழந்தையுடன் தன் அன்னை வீட்டுக்கே திரும்புகிறாள். வாழாவெட்டியின் வாழ்க்கை. அவளை எளிதில் அடையலாம் என ஒவ்வொரு ஆணும் நினைக்க அவள் தங்கள் கணவர்களை கவரும் விபச்சாரி என சகபெண்கள் நினைக்க அவதூறும் வசைகளும் நிறைந்த வாழ்க்கை. அதை தாளாமல் ஒரு நாள் குழந்தையை விட்டுவிட்டு கால்போன போக்கில் கிளம்பிவிடுகிறாள்.
போகும் வழியில் அவள் தன் கணவனின் ஊரில் இருந்த ஒரே தோழி வள்ளியை சந்திக்கிறாள். அவள் கணவன் கேரளாவில் வேலைக்குச் சென்றிருக்கிறான். அவள் அஞ்சலையின் முதல் கணவன் மண்ணாங்கட்டி பற்றி சொல்கிறாள். அவனுக்கு மறுமணமாகியும் அம்மனைவியை தீண்டாமல் துரத்திவிட்டு அஞ்சலையையே நினைத்து அவன் வாழ்ந்துவருவதைப்பற்றி விவரிக்கிறாள். அஞ்சலைக்கு இருளில் ஒரு வழி தெரிகிறது. மீண்டும் முதல்கணவனிடமே செல்ல எண்ணுகிறாள். வள்ளி கூட்டிச்செல்கிறாள். அவனும் அவளை ஏற்றுக்கொள்கிறான்
மீண்டும் ஒரு தாம்பத்தியம். இம்முறை அவள் கணவனை ஏற்றுக் கொண்டாலும் அவளால் அவனை நேசிக்க முடியவில்லை. அவனை சகித்துக் கொள்கிறாள் அவ்வளவுதான். மெல்ல மெல்ல ஒரு குடும்பத்தை உருவாக்குகிறாள். இரு குழந்தைகள் பிறந்துவளர்கின்றன. ஆனால் ஊரார் கண்களுக்கு அவள் அறுத்துக் கட்டிய அரை விபச்சாரிதான். தன் ஓர்ப்படியின் வசைகளை மீண்டும் மீண்டும் பெற்றபடித்தான் அவளால் வாழ முடிகிறது.
தாய் வீட்டில் வளரும் முதல் பெண் நிலா அஞ்சலைக்கு ஆழமான குற்ற உணர்ச்சியை உருவாக்குகிறாள். அவளை தன் தம்பி படிக்கவைப்பதில் ஆறுதல் கொள்கிறாள். அவளை அவனே கட்டிக்கொள்வான் என்று எதிர்பார்க்கிறாள். கையில் பணமில்லாத நிலையில் வேறு எந்த எதிர்பார்ப்பும் அவளால் வைத்துக்கொள்ள முடியாது. அவள் கணவன் அஞ்சலை தாய் வீடு செல்வதையோ மகளைப் பாப்பதையோ விரும்புவதில்லை. அவன் மறக்க விரும்பிய அவள் வாழ்க்கையை அது நினைவூட்டுகிறது. அந்த மகளை அவன் வெறுக்கிறான். அஞ்சலை தன் சம்பாத்தியத்தை மூத்த மகளுக்கு அளித்து விடுவாளோ என்ற ஐயம் அவனை கசப்பு நிறைந்தவனாக்குகிறது.
அஞ்சலையின் தம்பி சட்டென்று தன் இரண்டாம் அக்காவின் மகளை மணம் செய்ய முடிவுசெய்கிறான். அஞ்சலை அவனிடம் கெஞ்சி மன்றாடி அழுதபோதும் அவன் மனம் மாறவில்லை. அந்த அக்காவின் பணவசதி ஒரு காரணம். தூக்கிவளர்த்த பெண்ணையே எப்படி மணம் செய்துகொள்வது என்ற காரணம் அவன் சொல்வது. மனம் உடைந்து பொலிவிழந்து அஞ்சலையிடமே மகள் நிலா திரும்பி வருகிறாள். அவளை வைத்துக்கொள்ள அஞ்சலையின் கேரளம் போயிருக்கும் கணவன் ஒப்புக்கொள்ள மாட்டான். அஞ்சலைக்கு எந்தவழியும் இல்லை
அந்நிலையில் ஊர் அஞ்சலையின் மகள் நிலா மீது அவதூறு சுமத்துகிறது. வசைகள் அவமதிப்புகள். அஞ்சலையின் ஓர்ப்படியும் குடும்பமும் அவளை அவமதித்து தெருவில் வைத்து அடித்து நொறுக்குகிறார்கள். துன்பங்களின் உச்சியில் முற்றிலும் நிராதரவான நிலையில் தற்கொலைக்கு செல்கிறாள் அஞ்சலை. ஓடி வரும் நிலா அப்படியே பாய்ந்து தாயை அறைந்து அறைந்து அழுகிறாள். ”நீ ஏன் சாகவேண்டும்? போக இடமில்லாமல் தெருவில் நிற்ப்வள் நான். என்னை கொன்றுவிடு…” என்று கதறுகிறாள். அவள் காலில் விழுகிறாள் அஞ்சலை
கண்ணீரை துடைத்து மனம் ஆறும் மகள் நிலா அஞ்சலையின் கைகளைப் பற்றி தூக்குகிறாள். ‘போனது போகட்டும். செத்தால் என்ன ஆகப்போகிறது’ என்கிறாள். மகளின் கையை நம்பிக்கையுடனும் ஐயத்துடனும் பற்றும் அஞ்சலையில் நாவல் முடிகிறது
@@
‘சாதாரணமாகச் சொல்வது’ என்பதைப் பற்றிய ஒர் அழகியல் பிரக்ஞை ஆசிரியரில் செயல்பட்டுள்ளது என்பதை அவரது முன்னுரை காட்டுகிறது. தான் சொல்ல முனையும் வாழ்க்கையின் தரத்துக்கு சிறிய அளவிலான அழகுகள் கூட சுமையாகும் என்று படுவதாக ஆசிரியர் சொல்கிறார். ஆகவே இலக்கணசுத்தமான இயல்புவாத அழகியல் கொண்ட ஆக்கமாக இந்நாவல் உள்ளது.
எளிமையான முறையில் அஞ்சலையின் கதாபாத்திரத்தின் தனித்தன்மைகளை கண்மணி சித்தரித்துக் காட்டுகிறார். படிக்கப்போனவள் வயல்காட்டில் கிடைக்கும் உண்டைச் சோற்றுக்கு ஆசைப்பட்டு பள்ளியை விட்டு ஓடிஓடி வருகிறாள். நாளடைவில் வயல்வேலையே அவள் இயல்பாக ஆகிறது. அஞ்சலையின் இயல்பில் உள்ள இந்த ‘நாக்குத்துடிப்பை’ அவளுடைய அடிப்படையான ஒரு குணத்தின் வெளிப்பாடாக நாம் காணலாம். உடலின்பம் மீது இயல்பாக உருவாகும் இச்சை. இந்த இச்சைக்கும் எப்போதும் வேவுபார்த்தபடி இருக்கும் சமூகத்தின் கண்களுக்கும் இடையேயான முரண்பாடு மூலம் உருவாகும் சிக்கல்களே விரிந்து விரிந்து அவள் வாழ்க்கையை தீர்மானிக்கின்றன என்று எளிமையாகச் சொல்லலாம்.
உணவுச்சுவை போலவே எளிமையான காமம்தான் அஞ்சலை தேடுவது. சின்ன அக்கா கணவன் அவளை பெண் கேட்டபோது ஒரு சிறு யோசனைக்குப் பிறகு அதை ஒப்புக் கொள்வதில் அவளுக்கு தயக்கம் இல்லை. அவளை தனியாகச் சந்திக்கும் சின்ன அக்கா தங்கமணி ”… இந்தா பாரு புள்ள படுபயலா இருந்தாலும் வேற எவனையாம் பாத்துக் கட்டிக்க. மீறி நீயும் உன் அம்மாவும் ஏதாவது திட்டம் போட்டீங்க,அப்றம் என் பொணத்தைத்தான் பாக்கலாம்…” என்று மிரட்டியமையால்தான் அவள் பின் வாங்குகிறாள்.
பெண்பார்க்க வந்த கும்பலில் மாப்பிள்ளையாகக் காட்டப்பட்டவன் திடகாத்திரமாக இருக்கிறான். அதுவே அவளுக்கு ஆழமான உவகையும் மெல்லிய காதலுணர்வுகளையும் அளித்துவிடுகிறது. கிட்டத்தட்ட பசிக்கு உணவு என்ற அளவிலேயே இது இருப்பதை கண்மணி நுட்பமாகச் சொல்லிச் செல்கிறார். ஏமாற்றப்பட்டு இன்னொருவன் கணவனாகும்போது அஞ்சலையை உண்மையில் வதைத்தது எது என சொல்வது கஷ்டம். ”எமாத்தின பயலுவோடா நீங்க…உங்கள கண்டாலே பத்தி எரியுதுடா” என்று அவள் தினம் எல்லாரிடமும் பொங்கி வடிந்தாலும் உள்ளூர இருப்பது நிறைவிலா காமத்தின் வெம்மையே. அவளுடைய பசிக்கு இயலாத உணவு அவள் கணவன் என்பதே உண்மையான சிக்கல்.
உள்ளூர அவளுக்குத் தெரியும், அவளது கணவன் மண்ணாங்கட்டி அவளை ஏமாற்றவில்லை என்று. ஆனாலும் அவனை வெறுக்கிறாள். அவனை அவமதித்து வெறுகிறாள். ஆனால் அவளை திட்டம் போட்டு ஏமாற்றிய மீசைக்காரக் கொழுந்தனை அவள் வெறுக்கவில்லை. அவனுடன் காம உறவையே அவள் நாடுகிறாள். அவனை பார்ப்பதே அவளுக்குப் பரவசம் அளிக்கிறது. அவனைப்பற்றிய நினைவு எந்நேரமும் அவளில் நிறைந்திருக்கிறது. அவளை கோபம் கொள்ளச் செய்வது அவனது உதாசீனமே. அந்த வெறியில் அவனது சட்டையைப் பற்றிக்கொண்டு அவள் கேட்பதெல்லாம் ,” எனக்கொரு வழி சொல்லுடா கம்னாட்டி ” என்றுதான் ‘..உன் பெண்ணாட்டி உன்னை என் கூட விடுவாளா?’ என்றுதான். அவன் அதற்கு ஒப்புக் கொண்டிருந்தான் என்றால், அவன் மனைவி அப்படி ஒரு ஆவேசமான பெண்ணாக இல்லாலிருந்தால் கதை அங்கேயே முடிந்திருக்கும். அஞ்சலை அக்கா கல்யாணி போல அவளுக்கும் ஒரு மீறல்வாழ்க்கை அமைந்திருக்கும்.
கணவனை உதறிவிட்டு தன் அக்கா கல்யாணியுடன் சென்று ஆறுமுகத்தைப் பார்த்தக் கணமே அவனால் அஞ்சலை கவரப்படுகிறாள்.பசித்தவன் உணவைக் கண்டது போல என்றுதான் மீண்டும் சொல்ல முடிகிறது. அவனது சிவப்பு நிறம் மற்றும் அழகிய தோற்றம் குறித்து அவள் கொள்ளும் பரவசத்தை விரிவாக எழுதும் கண்மணி அவள் ஒரே கணத்தில் தன் முந்தைய வாழ்க்கையை உதறி ஆறுமுகத்தை கணவனாக ஏற்றுக் கொள்வதைக் காட்டுகிறார். அவனுடனான உறவில் அவள் நிறைவு கொள்கிறாள். அவனுக்கும் கல்யாணிக்குமான உறவு தெரியவந்தபோது அவள் கொதிப்பும் வெறுப்பும் கொண்டபோதிலும்கூட மெல்லமெல்ல அதை ஏற்றுக் கொள்ளும் இடத்தை அடைவதைக் காண்கிறோம்
கல்யாணிக்கு அஞ்சலை மீது பொறாமையும் குரோதமும் வளராவிட்டால், ஆறுமுகம் ஓரளவு இருவரையும் சரிசமமாக நடத்தியிருந்தால் என்ன ஆகியிருக்கும்? அஞ்சலை சாதாரணமாக அதை ஏற்றுக்கொண்டு சிறு அதிருப்தியுடன் வாழ்க்கையை முன்னெடுத்திருப்பாள். தங்கமணியின் கணவனிடம் வாழ்க்கையைப் பகிர எளிதில் முன்வந்தவள் தானே அவள்? அவளது தேவை எளிய பசி மட்டுமே. பெரிய கனவுகள் அவளை வழிநடத்தவில்லை.
மீண்டும் முதல்கணவனிடம் திரும்போது அஞ்சலை உடலும் மனமும் தளர்ந்து காம நாட்டத்தை இழந்து வெறும் தாய் மட்டுமாக ஆகிவிட்டிருக்கிறாள். நான்குபேர் மதிக்கும் ஒரு எளிய வாழ்க்கை. குழந்தைகளின் நலமான வாழ்க்கை. அவளுக்கு அதுவே பெரும் சுமையாக உள்ளது. அவளைச்சூழ்ந்த சமூகம் அதை அவளிடமிருந்து பறிக்கிறது.
இந்நாவலில் முக்கியமாக முதன்மைப்படும் சமூகப்பிரச்சினையே சமூகத்தின் வன்முறைதான். அஞ்சலையை ஓட ஓட துரத்தியடிக்கிறது சமூகம். இந்திய சமூகத்தில் எல்லா சாதிகளுக்குள்ளும் புறங்கூறுதல், வம்பு பேசுதல் இயல்பாக உள்ளது என்றாலும் ஐச்சூழலில் அது இன்னும் அதிகமாக இருக்கிறது. நாவலே அதற்கான காரணங்களையும் காட்டிச்செல்கிறது. மனிதர்கள் அசாத்தியமான அளவுக்கு அடர்ந்து நெருங்கியடித்து சேரியின் சந்துக்குள் வாழ்கிறார்கள். ஒவ்வொருவரும் இன்னொருவரின் கண்முன் தான் வாழ்க்கையைந் அடத்த வேண்டியிருக்கிறது. அந்தரங்கமே இல்லை. ஆகவே அந்தரங்கம் என ஒன்று உண்டு என்ற நினைப்பே எவரிடமும் இல்லை.
நாவலுக்குள் பல கதாபாத்திரங்கள் ஒருவரோடொருவர் காட்டும் கொடிய வெறுப்பும் இழைத்துக்கொள்ளும் தீங்குகளும் முதல் நோக்கில் அதிர்ச்சி ஊட்டுகின்றன. ஆனால் கூரிய வாசிப்பில் அவர்கள் எதிரிகளிடம் மட்டுமல்ல சொந்தக் குழந்தைகளிடம்கூட அதே குரூரத்துடன் நடந்துகொள்வதையே மீண்டும் மீண்டும் காண்கிறோம். அஞ்சலை உட்பட அனைவருமே பெற்ற குழந்தைகளை காரணமிருந்தும் இல்லாமலும் அடித்து துவைக்கிறார்கள். கணவனையும் தாயையும்கூட கொடுமையாக வசை பாடுகிறார்கள். அடிக்கவும் துணிகிறார்கள். அந்த வன்மம் ஒருவகையில் தன்மீதான, தன் விதி மீதான வன்மம். ஒரு மொத்தப்பார்வையில் அவர்களுக்கு விதிக்கப்பட்ட அவ்வாழ்க்கை மீதான ஆறாக் கசப்பு அது.
அது உண்மையில் மனம் சார்ந்த பிரச்சினையே அல்ல. ஒரு வாய் சோற்றுக்காக கடித்துக் குதறிச் சண்டையிடும் மக்களைப் பார்த்து அது அவர்களின் உளச்சிக்கல் என்று சொல்லிவிடமுடியுமா என்ன? ஒருவரின் சிறு மகிழ்ச்சி கூட பிறரிடமிருந்து பறிக்கவேண்டிய ஒன்றாக அமையுமளவுக்கு வறுமையும் போட்டியும் நிலவும் உலகம் அது. அத்துடன் மீட்பு கண்ணுக்குத்தெரியாத கொடிய வறுமை மூலம் உருவான முரட்டுத்தனமும் குரூரமும் அவர்களை ஆள்கிறது.
துயரமே வாழ்க்கையாக உள்ள அந்தச் சூழலில் ஒவ்வொருவரும் பிறருக்கு முடிந்தவரை தீங்கிழைத்து தங்களுக்கு விதிக்கப்பட்ட கொடிய வாழ்க்கையை மேலும் மேலும் துயரம் மிக்கதாக ஆக்கிக் கொள்கிறார்கள். நாவல் காட்டுவது அஞ்சலை மற்றும் அவள் சுற்றத்தின் கதையை. ஆனால் உதிரிக் காட்சிகள் வழியாக அந்தச் சூழலின் ஒவ்வொருவருமே அதே நரகத்தில்தான் வாழ்கிறார்கள் என்று தெரிகிறது. ஒவ்வொரு நாளும் தெருவில் சண்டை நடக்கிறது. உள்ளங்கள் குத்தி கிழிக்கப்படுகின்றன. எளியமுறையிலான வாழ்க்கையைக்கூட பக்கத்துவீட்டாரை வதைத்துத்தான் வாழவேண்டியுள்ளது, அல்லது பக்கத்து வீட்டாரை அஞ்சி வாழவேண்டியுள்ளது.
கொஞ்சம் கூலி அதிகம் கிடைப்பதற்காக பக்கத்து தெருவுடன் வேலைக்குப் போனால் சிக்கல் உருவாகிறது. பக்கத்து தெருவினர் இந்ததெருவுக்கு ஜென்ம எதிரிகளாக இருக்கின்றனர். ஒரு பசுமாட்டுக் கன்றை கொண்டுவந்து வளர்க்க ஆரம்பித்தால்கூட ஊரே பொறாமை கொண்டு ஒழிக்க சதி செய்கிறது. பரம ஏழைகளான ஒவ்வொருவருமே பிறரை பார்த்து ‘பணம் சேக்கிறான்’ என்று புலம்புகிறார்கள்.
அஞ்சலை இந்நாவலில் அடையும் அனைத்து துயரங்களுக்கும் காரணமாக இருப்பது ஊரலரே. சங்க காலம் முதல் பன்னிப்பன்னி பேசப்பட்டு வரும் இது நமது பண்பாட்டின் அடித்தளம் போலும். அவள் வீட்டை விட்டுக் கிளம்பி இன்னொரு வாழ்க்கைக்குள் செல்வதற்கான காரணங்களாக மூன்றுமுறை சொல்லப்படுவதும் ஊரார் அளிக்கும் உளவன்முறைதான்.
இன்னொரு கோணத்தில் இதன் வேர்களை நாம் பழங்குடி வாழ்வில் தேடலாமெனப் படுகிறது.கேரளப்பழங்குடிகள் வாழ்க்கையை ஓரளவுக்கு அறிந்தவன் என்ற முறையில் இதைச் சொல்லத்துணிகிறேன். ஒரு பழங்குடிச் சமூகத்தில் தனிமனித சிந்தனை, தனி வாழ்க்கை என்பதற்கே இடமில்லை. பழங்குடி சமூகமென்பது ஓர் உடல் போல ஒற்றைஅமைப்பு. அதன் ஒவ்வொரு குடிமகனின் வாழ்க்கையும் பிறர் வாழ்க்கையுடன் இறுக்கமாகப் பிணைந்துள்ளது. ஆகவே ஒருவரை அவர் சமூகமே ஒவ்வொரு கணமும் கண்காணிக்கிறது. கட்டுப்படுத்துகிறது. பழங்குடிச் சமூகங்களில் சமூகக் கட்டுப்பாடுகள், சடங்குமுறைகள், நம்பிக்கைகள் மற்றும் குடித்தலைவனின் ஆணைகள் கிட்டத்தட்ட இயற்கையின் மாறாவிதிகள் போன்றவை. ஒன்றாகவே சிந்தித்து ஒன்றாகவே வாழும்வரை அது இயல்பாக இருக்கிறது. ஒருவர் சிறிதளவு மீற ஆரம்பித்தால்கூட மொத்தச் சமூகத்தின் அழுத்தமும் மாபெரும் வன்முறையாக அவர் மீது கவிகிறது
இருபதாம் நூற்றாண்டில் பழங்குடிச் சமூகங்களில் கல்வி ,மதமாற்றம், இடம்பெயர்தல் ஆகியவை நிகழ ஆரம்பித்ததுமே பெரும்பாலான பழங்குடி சமூகங்கள் வன்மூறை மிக்கதாக ஆகிவிட்டன. ஊர்விலக்கு, சமூக விலக்கு முதல் ஊர்க்கொலைகள் வரை நடக்க ஆரம்பித்தன. நம் சமூகத்தின் அடித்தட்டு மக்களிடையே பழங்குடிவாழ்க்கையே தொடர்கிறது என்பதைக் காணலாம். அஞ்சலை நாவல் காட்டும் சமூகத்தின் சித்திரம் ஒருவகை அரைப்பழங்குடித் தன்மையுடனேயே இருப்பதை வாசகர் உணரலாம். பழங்குடிவாழ்க்கையின் இரு கூறுகள், இறுக்கமான சமூகக் கட்டுப்பாடுகள் மற்றும் உள்பிரிவினைகள். அஞ்சலை வாழும் சமூகமும் மீண்டும் மீண்டும் தன்னை பிரித்துக் கொண்டே இருக்கிறது. ஊர்ப்பிரிவினை, தெருப்பிரிவினை முதல் குடும்ப்பப் பிரிவினைவரை.
ஆக, அஞ்சலையின் துயரத்தின் காரணம் அவளது பழங்குடிவாழ்க்கைப் பின்னணி என்றும் சொல்லலாம். பழங்குடிச் சமூகங்களில் இவ்வாறு விதிமீறிச் சென்றமையால் சமூக விலக்களிக்கப்பட்டு அழிந்தவர்கள் ஏராளம். இருபதாண்டுகளுக்கு முன் கேரள சாஸ்திர சாகித்ய பரிஷத்தின் சார்பில் காஸர்கோடு மாவட்டத்தின் காட்டிற்குச் சென்றபோது இவ்வாறு விலக்கப்பட்டு அழியும் நிலையிலிருந்த ஒரு குடும்பத்தைக் கண்டோம். பேசியபோது அப்பழங்குடித்தலைவன் ‘புகஞ்ஞ கொள்ளி புறத்து’ [புகைவிடும் விறகை அடுப்புக்கு வெளியே எடு]என்ற மலையாளப் பழமொழியைச் சொன்னார்.
அஞ்சலை நாவலைப் படித்து முடித்தபின் முன்னுரையைப் பார்க்கையில் கண்மணி அஞ்சலையைப்பற்றிச் சொல்ல அதே உவமையை கையாண்டிருப்பதைக் கண்டு வியந்தேன். நாவலின் முதல்வரியே அதுதான், ”புகைய ஆரம்பிக்கும்போதே அணைத்துவிடத்தான் பாக்கியம் நினைத்தாள்…’
அஞ்சலையின் வாழ்க்கையை கூர்ந்து கவனிக்கையில் எழும் எண்ணங்களில் ஒன்று ஆணாதிக்கம் குறித்தது. நில உடைமைச் சாதிகளில்தான் உச்சகட்ட ஆணாதிக்கம் நிலவும். காரணம் நிலம் ஆணின் கையில் இருக்கிறது. ஆணால் புறக்கணிக்கப்படும் பெண் உயிர்வாழவே முடியாதவள். அவனை அவள் உணவுக்கே நம்பியிருக்கிறாள். ஆனால் உடலுழைப்புச் சமூகங்களில் ஆணாதிக்கத்துக்கான நேரடியான காரணம் இல்லை. அஞ்சலையின் சூழலை வைத்துப் பார்த்தால் ஆண் அளவுக்கே பெண்ணும் பொருளீட்டுகிறாள். சிலராவது பெண்ணை நம்பியே வாழ்கிறார்கள். உதாரணமாக தங்கமணியின் கணவன் அஞ்சலையை மணம் முடித்து இருவரின் சம்பாத்தியத்தில் வாழ நினைக்கிறான்.
ஆனாலும் இச்சமூகம் முழுக்க ஆணாதிக்கமே நிலவுகிறது. அஞ்சலை,அவள் அக்காக்கள் ஓர்ப்படி என அனைவருமே தங்கள் கணவர்களைத் தக்கவைத்துக் கொள்ள அல்லது விரும்பிய ஆணை தக்கவைத்துக் கொள்ளப் போராடுகிறார்கள். அஞ்சலை தன் வாழ்நாள் முழுக்க நிகழ்த்தும் போராட்டமே ஆணுக்காகத்தான் என எளிமைப்படுத்திச் சொல்லிவிட முடியும்தான். அவள் வாழ்க்கையின் எல்லா நிராதரவான கட்டங்களும் ஆணால் கைவிடப்படும்போது உருவாகின்றன. கடைசியில் அவள் மகள் அவள் தம்பியால் கைவிடப்படுகிறாள். ஆணாதிக்கம் இங்கே ஆழ்மனங்களிலும் சமூகப் பழக்கவழங்கங்களிலும் நுண்கருத்தியலாக ஒளிந்து உறைகிறது.
இந்நாவலின் ஆண் கதாபாத்திரங்களில் பலவகையான வண்ண வேறுபாடுகள் இருந்தாலும் ஆணாதிக்க இயல்பு முக்கியமாக உள்ளது. பெண்ணை அவர்கள் ஒரு பொருட்டாக நினைப்பதேயில்லை. தங்கமணியின் கணவன் அஞ்சலையை அடைய நினைக்கிறான், முடியாதபோது அவளை தகுதியற்றவனுக்குக் கட்டிவைக்கிறான். அவளை ஏமாற்ற துணைபோகிறான் ஒருவன். அவனுக்கு அவள் உணர்வுகள் பொருட்டாகப் படவில்லை. அவளை இரண்டாவதாக மணந்துகொண்டவனுக்கு அவள் ஒரு சதை என்பதற்குமேல் ஏதுமில்லை. அவளுக்காக ஏங்கி மீண்டும் அவளை அடைந்த முதல்கணவனோ விரைவிலேயே அவளை வெறுக்க ஆரம்பிக்கிறான். அவளுடைய உணர்வுகள் அவனுக்கு பொருட்டாகவே படவில்லை, அவன் வழிபட்டது அவள் உடலை மட்டுமே. விதிவிலக்காக வருபவன் கல்யாணியின் கணவன். அவனும் கூட ஒன்றும் செய்ய இயலாத கையறுநிலையில் வாழ்பவனே ஒழிய மாறான மனநிலை கொண்டவன் என்று சொல்லிவிட முடியாது.
அப்படிப் பார்த்தால் அஞ்சலையின் துயரம் ஓர் ஆணாதிக்கச் சமூகத்தில் எளிய காமத்திற்காகவும் குடும்ப வாழ்க்கைக்காகவும் ஏங்கி அது பறிக்கப்பட்ட ஒரு பெண்ணின் அவலம் என்றும் சொல்லலாம். ஆண்களின் காமத்திற்காகவும் ஆண்களின் குரோதத்திற்காகவும் விளையாடப்படும் சதுரங்கத்தில் வெட்டுபட்டு விழும் ஒரு காய் மட்டும்தான் . இதை விரிவாகப்பார்த்தால் தங்கமணி, கல்யாணி , ஓர்ப்படி முதல் கடைசியில் அவள் மகள் நிலா வரை அதே சதுரங்கத்தில் வெட்டுபடும் காய்களே என தோன்றுகிறது. அவர்கள் ஒருவரை ஒருவர் வெட்டிக்கொள்வது கூட இயக்கும் கைவிரல்களின் இச்சைக்கு ஏற்பத்தான். இந்நிலையில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் உள்வாழ்க்கையைச் சொல்ல வந்த இந்நாவல் தமிழ்வாழ்க்கையின் ஒரு குறுக்குவெட்டுத்தோற்றத்தையே காட்டி நிற்கிறது.
@@
அஞ்சலையின் கலைவெற்றிக்கு அடிப்படையாக இருக்கும் முக்கியமான அம்சம் குணச்சித்திர அமைப்பில் கண்மணி கொடுக்கும் நுட்பமேயாகும். தமிழில் இயல்புவாத நாவல்களில் பல சமயம் இது அமையாது போய்விடுகிறது. அஞ்சலை,தங்கமணி, கல்யாணி, அவர்களின் தாய் பாக்கியம் போன்று நாவல் முழுக்க நீளும் எல்லா பெண்களும் திட்டவட்டமான அடையாளங்கள் கொண்ட ஆளுமைகளாக உருவாக்கப்பட்டுள்ளனர். இந்த குணச்சித்திர வார்ப்புகளை சிக்கலாக்காமல் நேர்த்தியாக நாவல் முழுக்க கொண்டுசெல்கிறார், கதைமாந்தரின் புழக்கங்களில் குணச்சித்திர எல்லைகள் மழுங்குவதுமில்லை
பாக்கியம் திடமான நெஞ்சும் உலகியல் ஆர்வமும் கொண்ட உழைப்பாளியான கிராமத்துப் பெண்ணாக நாவலில் வருகிறாள். அவள் ஆளுமையின் பல முனைகளை திட்டவட்டமாக காட்டுகிறது நாவல். ‘ இந்தக் கார்குடல் பறத்தெருவில என்ன மாதிரி புள்ளைய பெத்தவளும் இல்ல, வளத்து கட்டிக்குடுத்தவளும் இல்ல” என்று நெஞ்சு நிமிர்த்தி சொல்பவள். கடைசிவரை தனக்கு எவருடைய உதவியும் தேவையில்லை என்பதில் தெளிவுள்ளவள். கையும் காலும் உள்ளவரை உழைத்து வாழும் திராணி கொண்டவள். பாக்கியம் அஞ்சலையை எப்போதும் உள்ளூரப் புரிந்துகொண்டவளாகவே இருக்கிறாள். அவர்களிடம் நெருக்கமான ஓர் உரையாடல் நிகழவில்லை என்றாலும்கூட .
கணவனை விட்டுவிட்டு மூத்த அக்காவின் கொழுந்தனை மணந்து அதுவும் சரியாகாமல் குழந்தையுடன் அஞ்சலை தாய்வீட்டுக்கே திரும்பும்போது அஞ்சலைக்கு உள்ளூர அச்சமிருக்கிறது, அம்மா என்ன சொல்வாள் என்று. ஆனால் அதை பாக்கியம் அன்புடன்தான் எடுத்துக் கொள்கிறாள். அஞ்சலை அக்குழந்தையையும் விட்டுவிட்டு முதல் கணவனுடன் வாழச்செல்லும்போது அதையும் அவள் ஏற்றுக் கொள்கிறாள். அக்குழந்தையை வளர்க்கிறாள். குழந்தையைப் பார்க்க அஞ்சலை வரும்போது பாக்கியம் அதைச் சொல்லிக்காட்டவோ வெறுக்கவோ இல்லை. இந்த மௌனமான புரிதல் நாவலின் முக்கியமான ஒரு சரடு
அம்மாவீடுவரும் அஞ்சலை அங்கிருந்து ஒரு பசுக்கன்றைக் கூட்டிச் செல்கிறாள். அதை அவள் வளர்க்கக் கண்டு ஊர் வயிறு எரிகிறது. மாடுதேடி வரும் கும்பல் ஒன்று அதை தங்கள் மாடு என்று சொல்கிறது. தான் மாடு திருடவில்லை என்று அஞ்சலை அழுததை அவர்கள் பொருட்படுத்தவில்லை. மாடுமேய்க்கும் பையன் வந்து சாட்சி சொல்லியும் அவர்கள் நம்பவில்லை.பசுவைக் கொண்டு வரச்சொல்கிறார்கள். பசுவுடன் பாக்கியமே வருகிறாள். நாவலில் இந்த இடம்தான் தாய்க்கும் மகளுக்குமான ஆழமான உறவின் தடையமாக இருக்கிறது. கன்று இரு பசுக்களை கண்டு இரண்டையும் நாடாமல் மிரண்டு நிற்கிறது. ஆவேசமடைந்த பாக்கியம் பசுவை இழுத்துக் கொண்டு செல்ல கன்று தொடர்கிறது. மொத்த நாவலையுமே ஒருவகையில் குறியீட்டுத்தளத்தில் புரிந்துகொள்ள உதவும் ஒரு கவித்துவத் தருணம் இது.
பாக்கியத்தின் குணங்களின் வாரிசாகவே நாவலில் அஞ்சலை வருகிறாள். கன்று பசுவைத் தொடர்கிறது. பாக்கியத்தின் பெண்களில் தங்கமணி ஓர் எல்லை. அவளும் ஆவேசமும் வேகமும் கொண்ட உழைக்கும் பெண்தான். ஆனால் கணவனுக்குக் கட்டுப்பட்டவள். நல்லவள் அத்துடன் உணர்ச்சிகரமான பலவீனம் கொண்டவள். அவள் கணவன் அதையே பயன்படுத்திக் கொள்ள முயல்கிறான். கல்யாணி மறு எல்லை. கணவனின் பலவீனத்தை அவள் பயன்படுத்திக் கொள்கிறாள். காமமும் உலகியலாசையும் கொண்டபெண். அதன் வேகமே அவளிடம் குரூரமாக வெளிப்படுகிறது. தன் முன் இருக்கும் ஒன்றை இழக்க விரும்பாத பசியின் உக்கிரமே அவள் ஆளுமை.
அஞ்சலை இரு எல்லைகள் நடுவே இருக்கிறாள். அவளை கண்மணி வழக்கமான மிகையுணர்ச்சிக் கதைகளில் வரும் நாயகி போல அனைத்து நன்மைகளும் நிரம்பியவளாகக் காட்ட முனையவில்லை. அஞ்சலையின் இயல்பான காமவிழைவு நாவலில் நேரடியாகவே சொல்லப்படுகிறது. அச்சூழலில் பிறரிடம் இருக்கும் அதே குரூரம் அவளிடமும் இருக்கத்தான் செய்கிறது. சிறந்த உதாரணம் அவள் தன் கணவனிடம் நடந்துகொள்ளும் முறை. அதைவிட கணவனின் வயோதிகத் தந்தையை நடத்தும் முறை. பல தருணங்களில் அது எல்லை மீறிச்செல்கிறது. அஞ்சலை கையாளும் பல சொற்கள் அவளுக்குள் இருக்கும் கல்யாணியைக் காட்டுபவை. அவற்றை கண்மணி குணசேகரன் மழுப்பவேயில்லை.
அத்துடன் அவள் மண்ணாங்கட்டி மீது காட்டும் முழுமையான உதாசீனம் நாவலின் முக்கியமான ஒரு சரடாகும். அவன் தரப்பில் நின்று நோக்கினால் அதன் முகம் கொடூரமானது. அதையும் கண்மணி மழுப்பவில்லை. அவன் அஞ்சலை போன்ற ஒரு பெண்ணை மணக்க விரும்பவோ முயலவோ இல்லை. அவனையும் ஏமாற்றித்தான் அஞ்சலைக்கு கணவனாக்கியிருக்கிறார்கள். இருந்தும் அவன் அவள்மீதான தன் உரிமையை வன்முறை மூலம் காட்டவில்லை. அவள் மீது மதிப்பும் அனுதாபமும் கொண்டிருக்கிறான். அவளை வழிபடுகிறான். அவள் உணர்வுகளைப் புரிந்துகொள்கிறான். அவள் உதறிச்சென்றபின்னரும் காத்திருக்கிறான். அவள் மீண்டு வரும்போது ஏற்றும் கொள்கிறான்
அந்தப்பிரியத்தை அஞ்சலை எதிர்கொண்ட விதம் எப்படி? அவளுக்கு ஆணின் தோற்றம் மட்டுமே முக்கியமாக இருக்கிறது. அயோக்கியனாக இருந்தும் ஆறுமுகத்தை கெஞ்சிக் கொண்டிருந்தவளுக்கு மண்ணாங்கட்டி ஒரு மனிதனாகவே படவில்லை. அவனுடைய உழைப்பில் குடும்பத்தை கட்டி எழுப்பும்போதுகூட அவனை அவள் அன்புடனும் மதிப்புடனும் நடத்தவில்லை. ஒரு கட்டத்தில் கணவன் என்ற இடத்திலிருந்தே விலக்கி விடுகிறாள். மண்ணாங்கட்டி அவள் மீது கொள்ளும் மனத்திரிபுக்கும் ஐயத்திற்கும் அதுவே ஊற்றுக்கண். அவ்வகையில் பார்த்தால் அஞ்சலையின் கடைசிக்காலத்து நிராதரவான நிலைக்கு அவளே பொறுப்பு.
இப்படி ஊகிக்கலாம். அஞ்சலை மண்ணாங்கட்டியின் பிரியத்தை புரிந்துகொண்டிருந்தால் அவனுடன் அவள் இரண்டாவது கட்டத்திலேனும் மனம் ஒன்ற முடிந்திருந்தால் அவளும் மகளும் கடைசியில் அடையும் அந்த துயரம் அத்தனை வீச்சுடன் இருந்திருக்குமா? தன்னை உதறிச்சென்ற மனைவியை ஏற்றுக் கொண்ட மண்ணாங்கட்டி அவள் மகளை அப்படி மூர்க்கமாக மறுத்துவிடுவானா என்ன? பிழை-சரிகளை வைத்து மனிதர்களை அளவிட முடியாது, வாழ்விலானாலும் புனைவினாலாலும். மனித மனத்தின் விருப்புகளும் வெறுப்புகளும் காரண காரியங்களுக்கு அப்பாற்பட்டவையே. ஆனாலும் பலசமயம் வாழ்க்கையின் சிக்கல்கள் பல அம்மனிதர்களின் உளச்சிக்கல்களாகவே இருக்கின்றன.
அஞ்சலைக்கும் அவள் தாய்க்கும் இடையேயான ஒரு பொது இயல்பு இந்நாவலில் கவனத்திற்குரியது. வாழ்க்கையுடன் சலிக்காமல் போராடும் இயல்பு என்று அதைச் சொல்லலாம். பாக்கியமும் சரி அஞ்சலையும் சரி வாழ்க்கை அவர்களுக்கு அளித்த அடிகளை ஏற்று மீண்டும் மீண்டும் ரோஷத்துடன் தலைதூக்குகிறார்கள், அடியேற்று சீறிப்படமெடுக்கும் நாகம் போல. அவதூறுகள் வசைகள் என சமூகத்தின் வன்முறை தன்னைத் தாக்கும்போது அஞ்சலை சீறிசினந்தெழுந்து எதிர்க்கிறாள். அடிக்கிறாள் அடிபடுகிறாள். பாக்கியம் நம்பிக்கையை இழப்பதேயில்லை. அஞ்சலை தன் உளச்சக்தியின் இறுதி எல்லையைத் தொட்டு சோந்து சரியும் கணம் நாவலின் இறுதியில்வருகிறது. அங்கே அஞ்சலையின் அதே ஆளுமையைக் கொண்ட அவள் மகள் நிலா வந்து அவளைத் தாங்கிக் கொள்கிறாள்.
நாவலின் தொடக்கத்தில் அஞ்சலையை மணம்புரிந்து அனுப்ப பாக்கியம் முடிவெடுக்கும்போது அஞ்சலை ‘ நீ நான்கு பெற்றாய். கடைசிக்காலத்தில் உன்னைப்பார்க்க யாருமே இல்லை என்ற நிலை வரக்கூடாது. நான் உன் கடைசிக் காலம் வரை கூடவே இருந்து உனக்கு சம்பாதித்துப் போடுகிறேன்’ என்று உளம் கனிந்து சொல்லும் இடம் முக்கியமானது. நாவலின் இறுதியில் மரணத்தை ஏற்கத் தயாராகும் அஞ்சலைக்கு மகள் நிலா அளிப்பதும் அதே உறுதிமொழியைத்தான்.
நிலாவின் ஆளுமை அதிகம் விவரிக்கப்படாமல் நிறைவு கொண்டுள்ளது. தாயில்லாமல் வளர்ந்தவள். அதாவது தாயால் துறக்கப்பட்டவள். தாய் மீது அவள் வன்மம் கொண்டிருக்க எல்லா நியாயங்களும் உண்டு. ஆனால் அவளிடம் பாசம் மட்டுமே உள்ளது. தாயின் பிழைகளை அவள் காணவே இல்லை. தன்னைத் துறந்த தந்தையைத் தேடி அவள் போகும் இடமும் அதே மனநிலையைத்தான் காட்டுகிறது. எவ்வித எதிர்மறை எண்ணங்களும் இல்லாத இளம் மனம். உலகை நம்பிக்கையுடன் நோக்கும் பருவம். அவளிடம் அப்பிராயத்திற்குரிய பாவனைகள் கூட இல்லை. உடலெல்லாம் சுண்ணாம்புடன் மெலிந்து குலைந்த அஞ்சலை அவளை சக மாணவிகள் நடுவே தெருவில் சந்திக்கும் தருணம் ஓர் உதாரணம். நிலா அன்னையை நிராகரிக்கக் கூடுமென்ற எண்ணம் அப்போது வாசகனுக்கு வரலாம். அவள் அப்படிச் செய்யவில்லை
ஆனால் தாயைப்போலவே அனைத்தையும் சிதறடிக்கும் பெரும் அடியை அப்பிராயத்தில் நிலாவும் ஏற்க நேர்கிறது. அவளுக்குள் தன் தாய்மாமன் மீதிருந்த காதல் சில குறிப்புகள் மூலம் நாவலில் சொல்லப்படுகிறது. மூர்க்கமாக அது உதாசீனம் செய்யப்பட்டு ஒரே நாளிலேயே அவள் அனாதையாகிறாள். அந்த அடியை பாக்கியம் போல அஞ்சலை போல திடமாக அவள் எதிர்கொள்ளும் இடத்தில் நாவல் உச்சம் கொள்கிறது. நாவல் காட்டுவது ஒரு அறுபடாத ஓட்டத்தை. வாழ்க்கைமீதான இச்சையின், தன்னம்பிக்கையின், உழைப்பைச் சாந்திருக்கும் துணிவின் பிரவாகத்தை. அது அப்பெண்கள் வழியாக அழியாது நீள்கிறது
@@
உணச்சிகரமான பல காட்சிகள் வழியாக நகரும் இந்நாவலில் மூன்று உச்சங்கள் உள்ளன என்று படுகிறது. அம்மூன்று உச்சங்களை மட்டும் தொட்டுத்தொடர்புபடுத்தி சிந்திக்கும் வாசகன் இந்நாவலின் பல தளங்களை ஒன்றாக எளிதில் தொகுத்துக் கொள்ள முடியும். ஒன்று அஞ்சலை தன்னை ஆசை காட்டி ஏமாற்றிய மீசைக்காரனிடம் காட்டில் வழிமறித்துப் பேசும் இடம். இரண்டு நிலாவை மணம் செய்ய மறுக்கும் தம்பியிடம் அவள் தன்னை இழந்து கெஞ்சும் இடம். மூன்று அவள் தற்கொலை செய்துகொள்ள முயல்கையில் நிலா அவளை மறிக்கும் இறுதிச் சந்தர்ப்பம்.
முதல் காட்சியில் நாம் காணும் அஞ்சலை வாழ்வாசை நிரம்பிய உயிர்த்துடிப்பான பெண். அவள் மீசைக்காரனிடம் கோருவது மறுக்கபப்ட்ட வாழ்க்கையை. அது ஒரு விரிந்த நோக்கில் அவள் தான் வாழும் சமூகத்திடம் முன்வைக்கும் கோரிக்கையே.” கம்னாட்டி நாயே மொதமொதல்லா எம் மனச கெடுத்ததும் இல்லாம என் வாழ்க்கையையே வீணாக்கிட்டியேடா பாவி! எப்டி இருந்தவ இப்டி லோலுபட்டு லொங்கழிஞ்சு நிக்கிறேண்டா . ஒரு பெத்தவளைப் போயி பாக்க முடியாம அண்ணாந்தோலு போட்ட மாடு மாதிரி நிக்கிறேண்டா.. எல்லாம் ஒன்னாலத்தாண்டா. ஒன்ன ஆம்படையானா நெனைச்சித்தாண்டா சம்மதிச்சேன். ஒன்ன மனசில வச்சுக்கிட்டு அவன் கூட எப்டிடா படுப்பேன்? கொலக்காரப்பாவி..” என்னும் வரிகளில் நாம் காண்பது தார்மீக ஆவேசமும் வாழ்வாசையும் மிக்க அஞ்சலையை.
ஆனால் தம்பியிடம் கெஞ்சும் இடத்தில் அஞ்சலை வாழ்வின் அடிகளால் ஆளுமை இழந்து நொய்ந்து போயிருக்கிறாள். தன் இறுதி நம்பிக்கையாக தம்பியை எண்ணியிருக்கிறாள். மீசைக்காரனிடம் அவள் தான் இழந்த வாழ்க்கையை அதட்டி வைது சாபமிட்டு ஆவேசமாகக் கோருகிறாள். ஆனால் தம்பியிடம் தன் சுயமரியாதையை முற்றிலும் இழந்து மண்ணளவு தாழ்ந்து கெஞ்சுகிறாள். அதுவும் சமூகத்திடமான கோரிக்கை என்று சொல்லலாம். உயிர்வாழ்வதற்கான கடைசி வாய்ப்பைக் கோரும் குரல் அவளுடையது. சமூகத்தின் அடிகளை ஏற்று நைந்து போன நெஞ்சம் அதனிடமிருந்து கடைசியாகச் சற்று கருணையை எதிர்பார்க்கும் பாவனை அது. அவள் மீது கருணை காட்டுவதென்றால் அதற்கு வாய்ப்புள்ள கடைசி மனிதன் அவன்தான்.
”எஞ்சாமி ஒன்னத்தைவிர வேற எங்க குடுத்தாலும் என்னை காரணங்காட்டி ஏம் புள்ளையக் கொத்தி புடுங்கிடுவானுவோ சாமி. காலம்பூரா ஒங்கட்டுத் தெருவில சாணியள்ளிட்டு கெடக்கிறேன் சாமி…எம் புள்ளைய விட்டுடாதேப்பா…” என்ற அஞ்சலையின் தீனக்குரலுக்கு பதிலாக அவன் அவள் மகளை படிக்கவைத்த செலவுக்குக் கணக்குசொல்கிறான். உண்மையில் தலையில் துணியைப்போட்டுக்கொண்டு வெளியே வந்து பஸ்ஸில் ஏறி ஏதோ அந்தரத்தில் போவதுபோல போய்க்கொண்டே இருக்கும் அஞ்சலை அக்கணத்தில் ஆன்மீகமாக இறந்துவிடுகிறாள்.
ஒரு பெண்ணாக அவள் தான் வாழும் சூழலில் இருந்து எதிர்பார்க்க இனி ஏதுமில்லை. அதன் பின் தன் மகளை வைத்துக்கொண்டு அவள் வாழும் முயற்சி என்பது கிட்டத்தட்ட இறந்துபோன ஒருத்தியின் யத்தனம் போலவே உள்ளது. அந்நிலையிலும் ஓர்ப்படியும் பிள்ளைகளும் அவளை தாக்கும்பொருட்டே சீண்டும்போது அவளில் எஞ்சிய உயிர் கசந்து எழுகிறது. சீறிச் சினந்து அடி வாங்கி தெருவில் சரிகையில் நாம் காண்பது ஒரு மனிதக் குப்பையை. சமூகத்தால் சிதைத்து வீசப்பட்ட ஓர் ஆத்மாவின் சடலத்தை.
தற்கொலைக்குச் செல்லும் அஞ்சலையை மகள் மீட்கும் காட்சி இந்நாவலின் இயல்பான உச்சம். தமிழ் நாவல்களில் அடையபெற்ற மிகச்சிறந்த கலையழகு மிக்க தருணங்களில் ஒன்று. ஆவேசமும் கண்ணிருமாக அன்னையை மாறி மாறி அடிக்கிறாள் நிலா. அவளுக்குள் பொங்கும் ஆவேசம் அவள் ஆளுமைக்குரிய முறையில் தாக்கும்தன்மையுடன் வெளிப்படும் இடம் கண்மணி என்ற கலைஞனை அடையாளம் காட்டும் தருணமாகும். ”நாடுமாறி நீ ஏண்டி சாவப்போற? நீ பண்ணனதுக்கு நாந்தாண்டி சாவணும்…..எனக்கு யாருடி இருக்கா? ” பின் நிதானத்துக்கு வந்து அவள் அன்னையை அரவணைத்துக் கொள்கிறாள். ”…இன்னம் பத்துப்பொழுது இந்தச் சனங்ககிட்ட இருந்து வாழ்ந்து பாக்காம செத்துபோறதுதானா பெரிசு? ஏந்திரு சாவப்போறாளாம் சாவ”
இத்தருணத்தில் தன் இறப்பிலிருந்து அஞ்சலை உயிர்கொண்டு மீண்டெழுகிறாள். ஒட்டுமொத்தமாக அவளை நிராகரித்துப் புதைத்த சமூகத்தின் சாரத்திலிருந்து எழுந்தவள் போல வந்து நிலா அவளை மீட்டெடுக்கிறாள். அவளை ஏமாற்றிய கைகள் அவளை கைவிட்ட கரங்கள் அவளை அடித்து துவைத்த கைகள் அவளை எள்ளி நகையாடிய கைகள் என பல்லாயிரம் கைகளுக்குப் பதிலாக நிலாவின் இளம் கைகள் நீண்டு அவளுக்குக் கை கொடுக்கின்றன.
உயிர்த்தெழும் அக்கணத்தை நுட்பமான இயல்புவாதப் படைப்பாளிக்கே உரிய முறையில் கண்மணி குணசேகரன் மிதமான சொற்களில் சாதாரணமாக அமைத்து நாவலை முடிக்கிறார். ‘உள்ளுக்குள் நடுக்கம் இருந்தாலும் இறுக்கிப்பிடித்திருந்த நிலாவின் கைத்தெம்பை நம்பி மெல்ல அடியெடுத்து வைத்தாள் அஞ்சலை’ மகளின் கை பற்றி தாய் நடைபழகும் இடம் மறுபிறப்புக்குப் பிந்தைய வாழ்க்கையின் தொடக்கம்.
@@
இந்நாவலை உருவாக்கிய முக்கியமான அம்சங்களில் நடையும் ஒன்று. மிகச் சாதாரணமான நடை அது. கடலூர் வட்டாரப் பேச்சுவழக்கை ஒட்டிய கூறல்நடை சிலசமயம் நேரடியான பேச்சுவழக்காகவே மாறிவிடுகிறது. உரையாடல்கள் எளிய நேரடியான பேச்சுகளாகவே உள்ளன, அவற்றிலும் நடையழகு என்பது இல்லை. யதார்த்தவாதியான ஒரு கிராம வாசி வாழ்க்கையைச் சொல்ல எவ்வளவு சொல்வாரோ அவ்வளவே இந்நாவலிலும் உள்ளது. நுட்பம் என்பது அது காட்டும் வாழ்க்கையிலேயே, கூறுமுறையில் இல்லை. இயல்புவாதத்தின் அழகியல் அது.
கிட்டத்தட்ட அம்மக்களின் பேச்சுமொழியிலேயே ஆசிரியரும் கதை சொல்கிறார்” அரிபிரியாய் நடவு வேலை நடந்துகொண்டிருந்தது..” என்பதுபோல. வருணனைகள் கூட மண் சார்ந்த எளிமையுடன் உள்ளன. அஞ்சலையின் அழகை விவரிக்கும் இடத்தில் ‘தெளிந்த நீரில் மண்புழு போல’ அவள் கழுத்தில் கிடந்த மெல்லிய மணிச்சரம் கிடந்தது என்கிறார் கண்மணி குணசேகரன்.
அம்மக்களின் பேச்சுமொழி செறிவானதல்ல. குறைவான சொற்கள். பெரும்பாலும் ஆவேசமாகச் சொற்களைக் கொட்டும் பேச்சுமுறை. இந்நாவலெங்கும் உரையாடல்களில் நகைச்சுவை, நக்கல், நையாண்டி ஏதுமே இல்லை. இதுவே குமரிமாவட்ட மக்களின் பேச்சு என்றால் அதில் பெரும்பகுதி இடக்கரடக்கல்களும் நக்கல்களும் நிறைந்திருக்கும். சுந்தர ராமசாமி, நாஞ்சில்நாடன், தோப்பில் முகமது மீரான், ஆ.மாதவன், நான் என அனைவர் எழுத்திலும் காணப்படும் பொதுக்கூறு இது. இது நிலப்பகுதியின் இயல்பாக இருக்கலாம்.அல்லது இந்நாவலின் உணர்வுபூர்வமான தேவைக்கேற்ப விடுபட்டதாக இருக்கலாம்.
பெரும்பாலும் வசை, புலம்பல் என்ற அளவிலேயே உரையாடல்கள் நிகழ்கின்றன என்பது இந்நாவலில் வாசகன் கவனிக்க வேண்டியது. இம்மக்களின் வாழ்க்கையின் ஒரு முக்கியமான தடையம் இது. மகிழ்ந்துபேச மிகக் குறைவாகவே இருக்கும் வாழ்க்கை. இன்பம் என்பது உழைப்பு எளிய உணவு இரண்டிலும் அடங்கிவிடுகிறது. அஞ்சலையின் மொத்த வாழ்விலேயே வள்ளி மட்டுமே அவளுக்கு மகிழ்வுடன் உரையாட ஏற்ற ஒரே துணையாக இருக்கிறாள்
உரையாடல்கள் செறிவில்லாத்து இருக்கும் இந்நாவலில் மிக அபூர்வமாகவே ஆழம் வெளிப்படும் பகுதிகள் உருவாகின்றன. இந்நாவலின் இயல்புவாதக் கட்டமைப்புக்குள் ஆழமாகச் சிந்திக்கும் ஒருமனிதர் வர வாய்ப்பில்லை. சாத்தியமான ஆழம் என்பதே அனுபவம் முதிர்ந்து உருவாகும் ஆழமே. இரு இடங்களைச் சொல்லலாம். தொளாரில் அஞ்சலையிடம் அவள் அக்காவுக்கும் கொழுந்தனுக்குமான உறவைப்பற்றிச் சொல்லும் பாட்டி ”நீ செவப்புத்தோலைப்பாத்து ஏமாந்துட்ட எம்மா. கறுப்புத்தான் நமக்குச் சொந்தம். இது ஊர ஏமாத்துற செவப்பு…. செவப்புகூட ஒருநாள் வெயிலுபட்டா கறுப்பாவும். கறுப்பு எண்ணைக்குமே செவப்பாவாது…” என்கிறாள்.
இதேபோல இன்னொரு இடம் இறுதியில் பாக்கியம் அஞ்சலையிடம் சொல்லும் கிட்டத்தட்ட கடைசி உரையாடல். ”அதுக்குல்லாம் யாரைச் சொல்லியும் குத்தமில்லை. எல்லாம் ஒன்னாலத்தான். நல்லதோ கெட்டதோ அவன்கிட்டயே இருந்திருந்தேன்னா இப்டி நடக்குமா?வெளிய வந்துட்ட. வந்த எடத்தில ஒத வாங்கினாலும் அடி வாங்கினாலும் நம்ம கையில புள்ள இருக்குத இத தூக்கிட்டு வராம இருந்திருக்கணும்…அதுவும் இல்ல. பழையபடி வேப்பம்பழமா இருந்தவன் பெலாப்பழமா இனிக்குதான்னு அவன் கிட்ட போயி ரெண்டு பெத்துக்கிட்ட”
அஞ்சலையின் முக்கியமான சிக்கலை அம்மா இங்கே தொட்டு விடுகிறாள். வாழ்க்கையை உறுதியாக எதிர்கொள்ளாமல் சட்டென்று உடைந்துபோய் நழுவி ஓடிவிடுவதே அவள் மீண்டும் மீண்டும் செய்வது. கடைசியில் அவள் கொள்ளும் தற்கொலைமுயற்சிகூட ஒரு தப்பி ஓட்டமே. ஆனால் நிலா அப்படி இல்லை. நாவலின் இறுதியில் அவள் சொல்லும் சொற்களில் திடமாக முடிவெடுத்து நின்று எதிர்கொள்ளும் மன ஆற்றல் தெரிகிறது.
கார்குடல் ,மணக்கொல்லை, தொளார் என மூன்று ஊர்களையும் அதிகமாக விவரிக்காமலேயே வேறுபடுத்திக் காட்டுகிறார் கண்மணி குணசேகரன். வயலும் நீரும் நிறைந்த கார்குடல், முந்திரிக்காடுகள் மண்டிய மணக்கொல்லை, நகர்சார் ஊரான தொளார் என இயற்கை மக்களின் இயல்பு அனைத்துமெ திட்டவட்டமாக மாறுபடுகின்றன. நிலக்காட்சிகளை தீட்டுவதில் பருவ மாறுதல்களைச் சொல்வதில் ஆர்வம் காட்டாத சித்தரிப்பு முறை இது. கதாபாத்திரங்களின் கண்வழியாக தெரியும் தகவல்களே அச்சித்திரங்களை எளிமையாக வாசக மனத்தில் உருவாக்குகின்றன.
@@
கண்முன் நிகழ்ந்துகொண்டிருக்கும் ஒரு வாழ்க்கையை கண்ட அனுபவத்தை அளிப்பதே இயல்புவாதத்தின் கலை. பரிசீலனை அல்ல. வரலாற்றில் வைத்துப் பார்த்தல் அல்ல. உட்புகுந்து அறிதல் கூட அல்ல. ஆசிரியர் ‘இல்லாமலேயே’ நிகழும் கூறல் அது. உண்மையான வாழ்க்கை எப்போதுமே முடிவுகளும் பதில்களும் அற்றது. அறியும்தோறும் விரிவது. அவ்வனுபவத்தை அளிக்கையில் இயல்புவாத நாவல் கலைவெற்றி கொள்கிறது. அஞ்சலை அப்படிப்பட்ட வெற்றிகரமான இலக்கிய ஆக்கம்.
[அஞ்சலை. நாவல். கண்மணி குணசேகரன். தமிழினி பிரசுரம்.சென்னை]
 நன்றி -ஜெயமோகன் 

கண்மணி குணசேகரனின் "நெடுஞ்சாலை"

கண்மணி குணசேகரனின் "நெடுஞ்சாலை" நாவலுக்கான விமர்சனம். - ச .முத்துவேல்


24 x 7 மனிதர்களின் இயலா நிலை 


அனைவருக்கும் வணக்கம்,

துப்பறியும் நாவல்கள், தோராயமாக 50 பாலகுமாரன் நாவல்கள் ஆகியவற்றைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் நான் வாசித்த நாவல்களின் எண்ணிக்கை 20 லிருந்து 30 வரைகூட தேறாது. அந்தளவுக்குப் புதிய வாசகனான எனக்கு நெடுஞ்சாலை நாவல் பற்றிய விமர்சனம் என்பது மிகையான சுமைதான். எனவே என் பக்குவத்தில் நெடுஞ்சாலை குறித்த வாசிப்பனுபவத்தை பகிர்ந்துகொள்கிறேன்

கண்மணி குணசேகரன் நவீனத் தமிழிலக்கிய உலகம் நன்கறிந்த பன்முகத்திறன் கொண்ட படைப்பாளி. நடு நாட்டைக் களமாகவும், நடு நாட்டு வட்டாரமொழியிலும் எழுதும் இயல்புவாதப் படைப்பாளி. அடிப்படையில் விவசாயி. இதுவரையிலும் அவர் எழுதியுள்ளவற்றில் ஒரு விவசாயியே தென்படுகிறார். ஆனால், அவர் தொழில்முறையாக கம்மியர். அதாவது மோட்டார் மெக்கானிக். அரசுப் போக்குவரத்துப் பணிமனையில் பணியாற்றும் தொழிலாளி. நான்கூட நினைத்ததுண்டு. வேளாண் சார்ந்தே எழுதும் கண்மணி, ஏன் தன் துறைசார்ந்து எழுதுவதில்லையென்று? நானறிந்தவகையில் வெள்ளெருக்குத் தொகுப்பில் இடம்பெற்ற கொடிபாதை சிறுகதை மட்டுமே சற்று போக்குவரத்துத் துறைக்கு நெருங்கிவருவதாக நினைவுகூர்கிறேன். இவ்வாறான சூழலில் தன் தொழில், துறை சார்ந்து எழுதியிருக்கும் நாவல்தான் நெடுஞ்சாலை. போக்குவரத்துத் துறை, ஓட்டுனர், நடத்துனர், கம்மியர் ஆகியவர்களை முதன்மையாகக் கொண்டு எழுதப்பட்டிருப்பது.

துறை சார்ந்த அனுபவங்களை படைப்புகளாக்குவதன்மூலம் அறியப்படாத பக்கங்களை நுட்பமாகவும், வாழ்வனுபவமாகவும் உணரமுடிகிறது. ஓர் இன்னலின் அல்லது அவலத்தின் தீவிரத்தை தொடர்பற்றவர்களும் நன்கு உணரச்செய்யும் வகையில் உணர்வுபூர்வமாக சம்பவங்களாகவும், தகவல்களாகவும், வாழ்வனுபவங்களாகவும் நீட்டிக்கச் செய்து வாசிக்கக் கிடைக்கும்போது அத்தீவிரத்தை நன்கு உணரமுடிகிறது. போக்குவரத்துத் துறை சார்ந்த இந்த நாவல் அந்தத் துறையைப் பற்றியும், அங்கு பணியாற்றும் மனிதர்களின் கொண்டாட்டங்கள், அவலங்கள் ஆகியவற்றை நமக்கு அளிக்கிறது. கண்மணி இந்த நாவலின் மூலம் சொல்லவிரும்புவதும் இவைகளாகத்தான் இருக்கமுடியும். பணிமனை, தொழிற்சாலை சார்ந்தவை இலக்கியத்தில் இடம்பெற்றிருக்கிறதா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால், நெடுஞ்சாலையில் விரிவாகப் பதிவாகியிருக்கிறது. அந்தவகையில் இதைப் புதுமையான களம் என்று எண்ணுகிறேன்.இலக்கியமும் வாழ்வாதாரமும் ஒன்றாகவே அமைந்தவர்கள், அல்லது நெருக்கமாக அமையப் பெற்றவர்களைக் காட்டிலும், இயந்திரங்களோடு வாழும் அடிப்படையான தொழிலாளர்கள் இலக்கியத்தில் ஈடுபடுவது ஒப்பீட்டளவில் கூடுதல் பாராட்டுக்குரியதுதான். அந்தவகையில் கண்மணி குணசேகரன், மு.ஹரிகிருஷ்ணன் போன்றவர்களின்மீது வியப்பும் , மதிப்பும் ஏற்படுகிறது.

நெடுஞ்சாலை நாவலில் விவரிக்கப்பட்டுள்ள பணிமனை, தொழிற்சாலை , ஆட்டோமொபைல் சார்ந்த வாழ்க்கையைக் கொண்ட ஒரு தொழிலாளியாகவே நானும் இருப்பதால் இந்த நாவலில் எனக்குப் பெரிய அளவில் புதியதொரு வாழ்பனுபவம் கிடைக்கவில்லை என்பதையும் பதிவுசெய்ய விரும்புகிறேன். இது நிச்சயம் என்வரையிலானது.

நான் இங்கு கதையைச் சொல்லிவிடப்போவதில்லை. கதையென்று சொன்னால் ஓரிரு வரிகளில் சொல்லிவிடமுடியும்.எனவே, கண்மணி குணசேகரனின் நெடுஞ்சாலை நாவலின் மூலம் எழுப்பப்பட்டுள்ள சமூக விமர்சனங்கள், நுட்பங்கள் ஆகியவற்றைக் கொஞ்சம் பார்ப்போம்.

ESSENTIAL SERVICE எனப்படும் இன்றி அமையாதவைகளான மின்சாரம், போக்குவரத்து, பால், காவல், தொழிற்சாலைகள் போன்றவற்றில் பணிபுரிபவர்கள் கடிகாரச் சுற்றுப்பணி எனப்படும் round the clock shift duty ல் 24 மணி நேரமும் தொடர்ச்சியாக இயங்கவேண்டியவர்கள். பரபரப்பாக ஓடி சூடுபறக்க பணிமனைக்கு வந்து நிற்கும் வண்டியில் அந்தச் சூட்டிலும் பராமரிப்புப் பணீசெய்யவேண்டியவர்கள் இவர்கள். சாணி, மலம் ஆகியவை ஒட்டியிருக்கும் ஈரம் காயாத பகுதிகளைத் தொட்டு வேலை செய்யவேண்டிவர்கள்.பயணிகள் எடுக்கும் வாந்தியைக் கழுவித்தள்ள வேண்டிய வர்கள்..இவர்களூக்கு பண்டிகை நாட்கள், ஞாயிறு விடுமுறை, இரவுத்தூக்கம், நேரத்திற்கு உணவு என்பதெல்லாம் மற்றவர்களைப் போன்று அமையப்பெறாதவர்கள். எல்லோரும் உறங்கப்போகையில் இவன் வேலைக்குச் சென்றுகொண்டிருப்பான். செய்தித்தாள் போடுபவனுக்கு விடிகாலைத்தூக்கம் என்பது வெறும் கனவு. அரிதாகக் கிடைக்கும் விடுமுறை நாட்களிலும் உடலென்னும் இயந்திரம் வழக்கம்போல் விழித்துக்கொண்டுவிடும். எல்லோரும் உறங்கிக்கொண்டிருக்க ஓட்டுனர் விழிப்புணர்வோடு வண்டியோட்டிக்கொண்டிருப்பார். இதுபோன்ற, இன்றி அமையாத பணிபுரிபவர்களை அரசாங்கம் எப்படி நடத்துகின்றது? என்ன சிறப்புச் சலுகைகள், மரியாதைகள் அளிக்கிறது என்று பார்த்தோமானால் கசப்பே மிஞ்சும். தகுதியுள்ளவர்களுக்கு வேலைவாய்ப்பையளிக்க வேண்டிய அரசாங்கம் அவர்களைத் தற்காலிகத் தொழிலாளர்களாக நியமித்து, அத்துக்கூலிகளாக பயன்படுத்தி சுரண்டல் செய்கிறது. இந்த நிலையிலேயே பணி நாள் முழுதும் கழித்துவிட்டு ஓய்வுபெறவேண்டியவர்களும் இருக்கிறார்கள். இப்படிச் சுரண்டல் செய்வதோடல்லாமல் பணியில் நிகழக்கூடிய தவறுகளுக்குப் பொறுப்பேற்கும் வகையில் தண்டனையாக இவர்களின் கூலியையேப் பறித்துக்கொள்ளும் அவல நிலையையும் நாவலில் சுட்டிக்காட்டுகிறார்.டீசல் சிக்கனம் செய்யாதவர்களிடமிருந்து அதற்குரிய தொகையாக தண்டனைப்பணம் கூலியில், சம்பளத்தில் பிடிக்கப்படுவது போன்ற உதாரணங்களைச் சொல்லலாம்.

இந்த நாவலின் மையமாக இருப்பது பேருந்தா? ஓட்டுனர், நடத்துனர், கம்மியர் எனப்படும் தொழிலாலிகளா? போக்குவரத்துத் துறையா? தனியார் வாகனங்களா? இவை எல்லாவற்றிற்கும் பொதுவாக இருக்கும் நெடுஞ்சாலைதான். பொருத்தமான தலைப்பை இட்டிருக்கிறார் ஆசிரியர்

380 பக்கங்களைக் கொண்ட நாவலை இரண்டு பாகங்களாகப் பிரித்திருக்கிறார். முதல் 300 பக்கங்களை வீடு என்றும், எஞ்சியவற்றை நாடு என்றும் குறிப்பிட்டிருக்கிறார் ஆசிரியர். இவ்விரண்டு பாகங்களும் தனித்து நின்றாலும் முழுமையுடையதாகக் கொள்ளும் வகையில் அமைந்திருக்கிறது. நேரடியாக இரண்டாம் பாகத்தைப் படித்தாலும் புரிந்துகொள்ளக்கூடிய வகையில் உள்ளது. முதல் பாகம் கதையில் வரும் மூன்று முதன்மையான கதாபாத்திரங்களை அறிமுகம் செய்து, அவர்களோடு ஆழ்ந்த நெருக்கத்தை அளிக்கிறது. இதேபோன்று முதல் பாகத்தில் வரும் அத்தியாயங்கள் 15 மற்றும் 16 ஆகியவை மட்டுமேகூட தனித்தனியாக நின்று இரண்டு சிறந்த சிறுகதைகளாகவும் விளங்குகிறது. முதல் பாகம் அழுத்தமானதாகவும் ,உணர்வுபூர்வமாகவும் அமைந்துள்ளது.

நாவல் என்பது விரிவான களம் கொண்டது. எவ்வளவு சொன்னாலும் தீராத விரிவும், இன்னும் சொல்ல நிறைய இருக்கும் அளவிற்கும் அனுபவங்களைக் கோருவது. இன்னும் விரிவாக கண்மணி அவர்களால் எழுதிவிடமுடியும். ஆனால் அந்த விரிவு நாவலுக்கு வலுசேர்க்கும் வகையில் நெருக்கமாகவும், பொருத்தமானதாகவும் இருக்கவேண்டும். நெடுஞ்சாலையில் ஆசிரியர் கையாண்டுள்ள சில பகுதிகள் நாவலின் விரிவுக்கும், மையத்திற்கும் சற்று இடைவெளி கொண்டுள்ளது. உதாரணமாக கம்மியர் பணிக்கு எழுத்துத் தேர்வுக்குச் செல்பவனிடம் வைக்கப்படும் கேள்வித்தாளில் இடம்பெற்றுள்ள கேள்விகளையெல்லாம் எழுதிக்கொண்டிருப்பது என்பன போன்று சிலவற்றைச் சொல்லலாம். கதாபத்திரங்கள் நிகழ்த்தும் அவர்களுக்கிடையிலான உரையாடல்களின் வழியாக துணைக் கதைகள் சேர்க்கப்பட்டுள்ளது, நாவலுக்கு வலுசேர்க்கும் வகையில் அமைந்திருக்கிறது. மாறாக இவற்றிற்குப் பதிலாக, essential service செய்யக்கூடியவர்களின் நிலையை, இன்னல்களை , பணிச்சூழலில் மனிதர்களுக்குள் விளங்கும் அரசியலை இன்னும் ஆழமாகவும் , நுட்பமாகவும் சொல்லியிருக்கலாம் என்று தோன்றுகிறது. நன்றாகவே இதைச் செய்திருக்கிறார் என்பதிலும் மாற்றுக்கருத்து இல்லை.அதேசமயம் ஆசிரியர் நிகழ்த்தும் நுட்பம் கவனத்தை ஈர்க்கிறது. உதாரணமாக சென்னையிலிருந்து வயர்லெஸ் வழியாக தகவல் சொல்லப்படுவது முதலில் திண்டிவனத்திலுள்ள பணிமனைக்குத் தெரிவிக்கப்பட்டு, பிறகு அங்கிருந்து தகவல் போக வேண்டிய இடமான விருத்தாச்சலத்திற்குத் தெரிவிக்கப்படும். அவர்கள் பயன்படுத்தக்கூடிய VHF SET வயர்லெஸ்ஸின் சக்தியின் நுட்பம் இயல்பாக பதிவாகியிருக்கிறது. இதை ஆசிரியர் உணர்ந்து பதிவு செய்திருந்தாரோ,இல்லையா என்று தெரியவில்லை.

இந்நாவல் நடைபெறும் காலக்கட்டம், நாவல் வெளியாகியிருக்கும் 2010லிருந்து குறைந்தது 10 ஆண்டுகள் பின்னோக்கிய காலக்கட்டம் என்று அறியமுடிகிறது. எனில் இந்த நாவலை ஆசிரியர் எப்போது எழுதத்துவங்கினார் என்ற ஆச்சரியம் ஏற்படுகிறது. செல்பேசிகள் இல்லாத காலக்கட்டம். தீரன், பெரியார், நேசமணி JJTC என்று போக்குவரத்து வட்டாரங்கள் நிலவிய காலக்கட்டம். ஹீரா, தேவயானி, ரம்பா ஆகியோர்களுக்கு நட்சத்திரத்தகுதி உச்சத்திலிருந்த கட் அவுட்டுகள் வைக்கப்பட்டிருந்த காலக்கட்டம். இந்த நாவலில் கிரிக்கெட் ரசிகர்களையும் சினிமா ரசிகர்களையும் நையாண்டி செய்யும் கட்டங்கள் பதிவாகியிருக்கிறது.பொதுவாகவே இலக்கியம் அவலங்களை, சோகங்களைப் பற்றியே பேசுபவை. கொண்டாட்டம், நகைச்சுவை என்பவை திரைப்படங்களில் பெற்றிருக்கும் வரவேற்பைப்போல் இலக்கியத்தில் பெறவில்லை. நெடுஞ்சாலை நாவல் முழுக்கவே நகைச்சுவை உணர்வு மிளிர எழுதப்பட்டுள்ளது. மேலோட்டமாக சிரிப்பை வரவைத்தாலும், அடியாழத்தில் மிஞ்சும் சோகமே நம் மனதில் எஞ்சி நிற்கும். அந்தவகையில்தான் ஆசிரியரும் எழுதியிருக்கிறார்.மேலும் ஆளுங்கட்சியினரின் தொழிற்சங்கத் தலைவர்களுக்கு அளிக்கப்படும் சலுகைகள், சேவற்பண்ணை போன்று ஆண்களீன் ஓய்வறையில் சுதந்திரமாக ஒருவர் நிர்வாணமாகக் குளித்துவிட்டு ஆடை மாற்றுவது, தன் கணவன் ஓட்டுனராக இயங்கும் வேளையில் அதே வண்டியில் பயணம் செய்யத்துடிக்கும் மனைவி போன்ற பல துல்லியமான பதிவுகள். முதன்மையான கதாபாத்திரங்களான மூவரும் சேர்ந்து மதுவிடுதியில் மதுவருந்தும் கட்டம் மிகுந்த நகைச்சுவையை அளிக்கிறவகையில் அமைந்துள்ளதைப்போல் நாவல் முழுக்கவே அமைந்திருக்கிறது. நவீன இலக்கியம் என்கிற பெயரில் காமம் வெளிப்படும் தருணங்களை ,உடலுறவுக் காட்சிகளை, விலாவாரியாக எழுதித் தள்ளாமல் ,ஆசிரியர் நாசூக்காகவும், படிமங்களாகவும் எப்போதும் எழுதுபவர். அய்யனாருக்கும், சித்தாளுக்கும் இடையிலான காமம் கலந்த காதல் வாசகர்களின் நெஞ்சில் கனமாக உறைந்து நிற்கக் கூடியது.

அஞ்சலை நாவலைவிட அதிகப் பக்கங்கள் கொண்டிருந்தாலும் அஞ்சலையளவுக்கு கனம் இல்லையென்று கருதுகிறேன்.

(08-05-10 அன்று சொற்கப்பல் விமர்சனதளம் மற்றும் தக்கைச் சிற்றிதழ் ஆகியவை இணைந்து நடத்திய நாவல் விமர்சனக் கூட்டத்தில் வாசிக்கப்பட்ட கட்டுரை)

சாளரத்தில் தெரியும் வானம்-கண்மணி குணசேகரன்

சாளரத்தில் தெரியும் வானம்-கண்மணி குணசேகரன்

என் பார்வையில் படைப்பாளிகள் - ச.முத்துவேல்
      Thadagam : Muthuvel - Saalarathil Theriyum Vaanam
சாளரத்தில் தெரியும் வானம்
கண்மணி குணசேகரன்


'இந்த உலகத்தில்
ஒரு கோடியே நூற்றியெட்டு
துயரங்கள் இருக்கின்றன.
வரலாறு,தத்துவம் மற்றும்
இலக்கியங்களால்
இன்னும் ஆயிரத்திற்கும் அதிகமான
துயரங்களைக் கண்டறிய முடியவில்லை.
(கவிஞர் இசையின் கவிதையிலிருந்து)


இவ்வுலகில் இன்னும் அறியப்படாத துயரங்கள் நிறையவே இருக்கின்றன.இலக்கிய வாசிப்பு என்பது நடுத்தர மக்களிடையேதான் அதிகம் என்று கணிக்கமுடிகிறது. நடுத்தர மற்றும் மேல்தட்டு மக்களைப் பற்றிய வாழ்வியல் பதிவுகளே இதுவரை பதிவாகிக்கொண்டு வந்துள்ளது. ஏனெனில், எழுதியவர்களின் பின்புலம் அவ்வாறானதாய் இருந்திருக்கிறது.கல்வி வாய்ப்புகள் ஓரளவு பெருகியுள்ள தற்போதைய சூழலில், இலக்கியம் என்பதும் பல்வேறு தரப்பட்ட மனிதர்களிடமிருந்து வெளிப்பட்டு செழுமையாகத் திகழ்கிறது.ஒடுக்கப்பட்ட, விளிம்பு நிலை மக்களும் ஓரளவு கல்வி கற்று எழுதத்துவங்கியுள்ளனர்.இவர்களின் எழுத்து அனுபவப்பூர்வமானதாகவும்,புதிய வீச்சோடும் திகழ்கிறது.கண்மணி குணசேகரன் என்கிற படைப்பாளி இவர்களில் குறிப்பிடத்தகுந்தவர்.


இவரின் கதை மாந்தர்கள் விளிம்பு நிலை மனிதர்கள்.கிராமத்து விவசாயக்கூலிகள், பன்றி மேய்ப்பவர், சாவு மேளம் அடிப்போர், நலிந்து வரும் கூத்துக்கலைஞர்கள் போன்றவர்களாவர். இந்த மனிதர்களின் அகவுலகம் பற்றி,இவர்களின் உலகம் சொற்பமானதாயிருப்பதை அறியச் செய்யும் எழுத்து.இவர் கதைகள் பேசுவது இம்மாந்தர்களின் வாழ்வு இன்னல்களை, சிக்கல்களை.ஒரு செய்திக்கும், இலக்கியப் படைப்புக்கும் இருக்கும் வேறுபாடு என்னவாக இருக்க முடியும்? அந்த வேறுபாட்டை இவர் தன் எழுத்தில் மிகவும் இயல்பாகத் தக்கவைக்கிறார்.ஒரு முதியவருக்கு இருக்கும் அனுபவத்தோடு இவரின் படைப்புகளைப் பார்க்கும்போது இவரின் அவதானிப்புத் திறன் ஆச்சரியமளிக்கும்.ஒரு கதையில் கதைசொல்லியின் குரல், உணர்வு ஆகியவற்றோடு நின்றுவிடாமல் அக் கதையில் வரும் எல்லாக் கதாபத்திரங்களின் உணர்வுகளையும்,சூழல்களையும்,அவர்களின் பார்வையையும் பதிவு செய்திருப்பார்.பெண்களின் மனவுணர்வுகளையும், அவர்களின் அந்தரங்கச் சிக்கல்களையும்கூட மிகத் துல்லியமாய் எழுதியிருக்கிறார்.இவரின் எழுத்துக்களம் கிராமங்கள். நடு நாடு என்று வர்ணிக்கப்படும் கடலூர்,விருத்தாச்சலம் சுற்றுவட்டார செம்புலக் கிராமங்கள். கிராம, வேளாண் வாழ்வின் நுண்தகவல்கள் அனுபவத்தின் விளைவால் இவருடைய ஆக்கங்களில் விரவிக்கிடக்கும். நவீன இலக்கியம் என்கிற பெயரில் உடலுறவுக்காட்சிகளை விலாவாரியாக எழுதிக்குவிப்பவர்கள் மத்தியில் அதுபோன்ற சூழலை எழுதும்போதுகூட மிக நாசூக்காக ஆபாசமில்லாமல் எழுதும் பண்பு இவரிடம் இருக்கிறது. நடு நாட்டு வட்டார மொழியிலும், யதார்த்தவாதத்தையும் எழுதுபவர்.சிறுகதை,கவிதை, புதினம், கட்டுரைகள், எனப் பன்முகத்திறன்கொண்ட, தமிழின் குறிப்பிடத்தகுந்த படைப்பாளி.

கண்மணி குணசேகரன் கடலூர் மாவட்டம், திருமுதுகுன்றம் (விருத்தாசலம்), அருகிலுள்ள மணக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்தவர்.இயற்பெயர் அ.குணசேகர்.1971 ல் பிறந்த இவர் ,அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில்(I T I), இயந்திர வாகனப் பராமளிப்பாளராகப் பயிற்சி பெற்று,தற்போது,அரசு போக்குவரத்துக் கழகப் பணிமனையில்,பணி புரிகிறார்.திறந்த வெளிப் பல்கலைக் கழகம் மூலம்,இளநிலை வணிகம் படித்துப் பட்டம் பெற்றிருக்கிறார்.

நடு நாட்டு சொல்லகராதி என்ற ஒன்றைத் தன் தனிப்பட்ட முயற்சியால் உருவாக்கியிருக்கிறார். ஒரு பல்கலைக்கழகமோ, பெரிய குழுவோ செய்ய வேண்டிய வேலையை தனி மனிதராகச் சாதித்திருக்கிறார். அதுவும், விளம்பர நோட்டீசுகள் போன்ற தாள்களைப் பயன்படுத்திப் பின்னால் வெள்ளைப் பக்கங்களில் எழுதித் தகவல் திரட்டியிருக்கிறார். எனவேதான், அவரே தன்னுடைய அஞ்சலை மற்றும் நடு நாட்டு சொல்லகராதி ஆகிய இரண்டையும் முத்திரைப் படைப்புகளாக குறிப்பிடுகிறார். அஞ்சலைப் போன்றொரு புதினத்தை ஒரு கிராமத்தான்தான், விவசாயிதான் எழுத முடியும். கண்மணி அப்படிப்பட்டவர்தான்.செம்புலத்தின்மீது வலிந்து படியும் (நெய்வேலியின்) சாம்பல் கரியைப் பற்றிய கதைகளையும் நிறைய எழுதியிருக்கிறார்.

இவரின் ‘அஞ்சலை’ என்கிற புதினம் கோழிக்கோடு பல்கலைக் கழகத்தில் பாடநூலாக வைக்கப்பட்டுள்ளது.
கடந்த 2007ம் ஆண்டுக்கான,இளம் படைப்பாளிகளுக்கான சுந்தர ராமசாமி விருது பெற்றவர்.

இவரின் படைப்புகளாவன;

1.தலைமுறைக் கோபம்- கவிதைகள்
2.காட்டின் பாடல் கவிதைகள்
3.கண்மணி குணசேகரனின் கவிதைகள் (முழுத் தொகுப்பு)
(காலடியில் குவியும் நிழல் வேளை)
4.வெள்ளெருக்கு - சிறுகதைகள்
5.ஆதண்டார் கோயில் குதிரை - சிறுகதைகள்
6.உயிர்த் தண்ணீர் - சிறுகதைகள்
7.அஞ்சலை - புதினம்
8.கோரை - புதினம்
9.நடு நாட்டு சொல்லகராதி

மேலும் தொடர்ந்து எழுதி வருகிறார்.கவிதைகளைவிட உரை நடையே இவரின் ஆகச் சிறந்த படைப்புக்களமாக இருக்கிறது.

அவரின் சில குறுங்கவிதைகள்

பாம்புச் சுவடு மீது
பதிந்து கிடக்கிறது
அழகாய்
பிஞ்சுப் பாதம்.
*
பள்ளிக் காலம்
கள்ளிக் கிறுக்கல்
இன்னும்
காயாத
பால் எழுத்து.
*
உதிர்ந்து கிடந்த
பூக்கள்...
அழகு.
கூட்டும்போதுதான்
குப்பையாகிவிட்டது.
*
ஏற்றிவிட்டுத்தான்
கரைத்தாள்.
கூழ் குடிக்கும் ஆசையில்
இறங்கி வந்துவிட்டது
வளையல்
*
கொலுசு இல்லா
பாத வெறுமையை
வளைத்து
நிறைவு செய்தது
வரப்பில் சாய்ந்த
தங்க மணிக் கதிர்.
*
கருவறை
சேதியறியா
பால் தாரை
சுரக்கிறது
இறந்தே பிறந்த
குழந்தைக்கும்
*
வாசலுக்கே வந்து
கதவைத் தட்டுகின்றன
கூடை அரும்புகள்.
கொடுத்துவைத்தவைதான்
நகரத்துத் தேனீக்கள்
*
கட்டு
காம்புகளுக்குத்தான்
இதழ்களுக்கல்ல
இடமாற்றத்திலும்
அழகாய்த்தான் பூத்தன
சரக்கூந்தல்
அரும்புகள்

நெடுஞ்சாலை-கண்மணி குணசேகரன் -நாவல் அறிமுகம்

நெடுஞ்சாலை-கண்மணி குணசேகரன் -நாவல் அறிமுகம்

கண்மணி குணசேகரனின் நெடுஞ்சாலை நாவல் தமிழில் ஒரு புதிய பாதையை திறக்கிறது.பெரியார் பணிமனையில் மெக்கானிக்காக பணிபுரியும் கண்மணி குணசேகரனின் அனுபவ தளத்தில் விரிகிறது இந்நாவல்.
தமிழில் வலுவான பின்புலங்களை களங்களாக கொண்ட நாவல்கள் குறைவு. சமீபகாலங்களில் சொன்னால் ஜோடிகுரூஸின் ஆழி சூழ் உலகு, கொற்கை, கோபாலகிருஷ்னனின் மணல் கடிகை போன்றவற்றை சொல்லலாம். நெடுஞ்சாலையின் பின்புலம் அரசு போக்குவரத்து துறையின் பணிமனை.

பெரியார் பணிமனையில் தற்காலிக ஊழியர்களாக வேலைபார்க்கும் மூன்று இளைஞர்களின் பார்வையில் நெடுஞ்சாலை நீள்கிறது.
ஒரு அரசு பொதுத்துறை, அதுவும் மக்கள் உயிரோடு சம்பந்தப்பட்ட போக்குவரத்துத்துறை எத்தனை அலட்சியமாக சமாளிப்புகளோடு, பெரும் மனிதபிரயத்தளங்களில், உழைப்பில், தற்காலிக ஊழியர்களின் கடும் மன அவஸ்தைகளோடு தனியார் போக்குவரத்து நிறுவனங்களின் கெக்கலிப்போடு இயங்கி கொண்டிருக்கிறது என்பது இதன் ஒவ்வொரு பக்கங்களிலும் உணரமுடிகிறது.
ஒரு களத்தை பின்புலமாக கொண்டதல்ல இந்நாவலின் சிறப்பு. அதை கலையாக்கத்துடன் நெய்திருப்பதே கண்மணியின் பலம். நாவல் எங்கும் நுட்பமான குறிப்புகளுடன் இதை சாத்தியப்படுத்துகிறார் கண்மணி.
நெடுக நெடுக நுட்பமான குறிப்புகள். இருபது வருடம் டீசல் அடித்து டீசல் அடித்து கண்கள் மங்கிப்போன சிவமணி, எப்பொழுதும் தூங்கிக்கொண்டே இருக்கும் மருதமலை, ராஜ ராஜேஸ்வரி பஸ் ஓனர் செட்டி, அரசு பேருந்து சீ.எல். ஓட்டுனருக்கு லஞ்சம் தரும் தனியார் பஸ் கிளீனர், அதற்கு ஊடகமாக கடலை பொட்டலம், எப்பொழுதும் கர்த்தர் வழிபாட்டில் இருக்கும் செக்யூரிட்டி, மாலை டிரிப்பில் லைட் வயர்களை அறுத்து விடும் பள்ளி மாணவர்கள், பெர்சனல் மேனேஜரையே அடையாள அட்டை கேட்டு இறக்கிவிடும் ஓட்டுனர், ஜி.எம்.கள், மல்லுக்கட்டும் டைம் கீப்பர்கள், வேலைக்கே வராத ஆளுங்கட்சி தொழிற்சங்கம் சார்ந்த ஊழியர்கள், தன் கணவன் ஏழைமுத்து ஓட்டும் வண்டியில் ஒருமுறை டவுனுக்கு போய் வரவேண்டும் என்று ஏங்கும் பார்வதி, வண்டியில் இருக்கும் வாந்திகளை தேடி தேடி திண்ணும் நாய், இப்படியான நுட்பமான சித்தரிப்புகளும் பாத்திரங்களும்.
எளிய மனிதர்களின் கதை தான் இது. தற்காலிக ஊழியர் என்ற பெயரில் அடிமைகளை போல் நடத்தப்படும் ஓட்டுனர்கள், நடத்துனர்கள், மெக்கானிக்குகள். இவர்களுக்கு முன் எப்பொழுதும் நிரந்தர வேலை என்ற மாயமான் ஓடிக்கொண்டே இருக்கிறது. வேலை நிரந்தரம் ஆவதற்காக அன்றாடம் கடுமையான வேலைகளையும், அவமானங்களையும், தாங்கி தாண்டி காத்திருக்கிறார்கள். அவர்களின் சிறிய விருப்பங்களும் கோரிக்கைகளும் இரக்கமற்று புறக்கணிக்கப் படுகின்றன.
சொல்லாமல் கொல்லாமல் முறிந்து போகும் தமிழ் – கலைச்செல்வி காதல், முன்பு தன் மனதில் தேங்கி இருந்தவளை மறுபடியும் பார்க்கும் ஏழைமுத்து, பெரிதாய் ஒன்றும் பேசிவிட முடியாமல் இருவருக்கும் இடையே நிகழ்காலம் கொடூரமாய் நிற்கிறது. எந்த வண்டியில் என்றைக்கு போவோம் என்று தீர்மானிக்க முடியாத தற்காலிக ஊழியரின் பணியைப் போலத்தான் அவர்கள் வாழ்வும் இருக்கிறது.
நாவலின் கலையாக்கத்தின் உச்சம் அய்யனார் - சந்திரா மறுபடியும் சந்திப்பது. வாழ்வு என்பது நாம் நினைப்பது போல் இல்லை, அது அதன் போக்கில் பயனப்படும். அய்யனார் கொத்தனாராக வேலை பார்த்த பொழுது அவன் மனதுக்கு மிக நெருக்கமான சித்தாளாய் இருந்தவள் சந்திரா. பின்பு அவளுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகளோடு, கணவன் அவளை கைவிட்டு, அவள் சித்தாளாக தொடர்கையில் சில வருடங்களுக்கு பின் தற்காலிக ஊழியரான அய்யனார் சஸ்பெண்ட் செய்யப்பட்ட சமயத்தில் தற்செயலாய் சந்திக்கிறார்கள். ஒரு நாள் மறுபடியும் இணைந்து வேலை பார்க்கிறார்கள். தண்ணீர் வற்றிப்போன ஆற்றில் முன் இரவில் நடக்கிறது அவர்களின் புணர்ச்சி. “இனி நீ என்னை பாக்கவே கூடாது அய்யனாரு, கல்யாணம் பண்ணி குழந்தகுட்டியோட நல்லா இரு.” என்று கூறிவிட்டு போகிறாள் சந்திரா.
ஆறு மெலிந்து ஓடுகிறது. மறுபடியும் ஒருநாளும் திரும்பி வராத ஒரு நாள் அது சந்திராவுக்கும் அய்யனாருக்கும். நாவலின் ஆக உச்சமும் துக்கமும் இதுவே என நான் கருதுகிறேன்.
அற்பகாரணங்களுக்காக பணி இழக்கிறார்கள் தமிழும் ஏழைமுத்துவும். மறுபடியும் பழைய வாழ்வுக்கு திரும்புகிறார்கள். இந்த தற்காலிக வேலையை அடிப்படையாக கொண்டு போட்டிருந்த சிறிய கணக்குகள் கூட நிறைவேறவில்லை. ஏழைமுத்து மறுபடியும் டிராக்டர் ஓட்டவும், தமிழ் தன் அப்பாவின் பெட்டிக்கடைக்குமாக. அய்யனார் தொடர்ச்சியாக மெக்கானிக்காக மிகவும் சிரமத்துடன் தாக்குபிடித்துக் கொண்டிருக்கிறான்.

நாவலின் “வீடு” பகுதியில் இருக்கும் செறிவு, ”நாடு” பாகத்தில் குறிப்பாக அந்த பேருந்தின் சென்னை நோக்கிய பயணத்தில் வெகுவாக குறைகிறது. நம்மை மிகவும் பதற்றத்துக்குள்ளாக்க வேண்டிய பகுதி அது. ஒரு அறுபது எழுபது பயணிகளின் உயிரோடு விளையாடும் பயணம் அது. ஆனால் அந்த பதற்றம் பின் தள்ளப்பட்டு நகைச்சுவையே முன் வந்து நிற்கிறது. பெரும் மனநெருக்கடியை உருவாக்கும் வகையில் கண்மணி அதை சித்தரித்து இருக்க வேண்டும். நிச்சயமாய் இது ஒரு பெரும் குறையே.
நெடுஞ்சாலைக்கு இரவென்றும் பகலென்றும் இல்லை. மழையென்றும் வெயிலென்றும் இல்லை. எல்லாவற்றின் ஊடாகவும் அது இருக்கின்றது. கண்மணியின் இந்த நெடுஞ்சாலையும் ஒரு கறுப்பு வெள்ளை சித்திரமாகவும் சமயங்களில் வண்ணத்திலும் மிகவும் கலையாக்கத்தோடு இந்த வாழ்வை தீட்டுகிறது. அதுவே இதை தமிழில் நல்ல நாவல்களில் ஒன்றாக ஆக்குகிறது.
- சாம்ராஜ்
நன்றி சாம்ராஜ்

சுந்தர ராமசாமி விருது

சுந்தர ராமசாமி விருது திரு.கண்மணி குணசேகரனுக்கு வழங்கப் படுகிறது

ராஜமார்த்தாணடன்



எழுத்தாளர் சுந்தர ராமசாமி நினைவாக நெய்தல் இலக்கிய அமைப்பு நிறுவியுள்ள 'சுந்தர ராமசாமி விருது' இவ்வாண்டு முதல் வழங்கப்படுகிறது. வாசகர்கள், படைப்பாளர்கள், இலக்கிய ஆர்வலர்கள் முன்வைத்த பரிந்துரைகளின் அடிப்படையில் எழுத்தாளர்கள் பாவண்ணன், குமாரன், அரவிந்தன் ஆகிய மூவர் அடங்கிய நடுவர் குழு விருதுக்கு உரியவரைத் தேர்ந்தெடுக்கும் பணியில் செயலாற்றியது.

2007 ஆம் ஆண்டுக்கான 'சுந்தர ராமசாமி விருது' இளைய தலைமுறையைச் சேர்ந்த படைப்பாளர்களில் ஒருவரான திரு.கண்மணி குணசேகரனுக்கு வழங்கப் படுகிறது.பத்தாயிரம் ரூபாய் பரிசுத் தொகையும் பாராட்டிதழும் கொண்ட இவ் விருதை கண்மணி குணசேகரனுக்கு எழுத்தாளர் திரு.நாஞ்சில்நாடன் இந்த மேடையில் வழங்குகிறார்.விருது பெறும் கண்மணி குணசேகரனை
நடுவர் குழுவின் சார்பில் வாழ்த்துகிறோம்.

இந்த விருது உருவான பின்னணி பற்றியும் விருதுக்குரிய படைப்பாளியைத் தேர்ந்தெடுக்க நடுவர் குழு பின்பற்றிய விதிமுறைகள் பற்றியும் சில கருத்துக்களை இங்கே பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.தேர்வுக் குழுவின் அறிக்கையை குழுவினரில் ஒருவரான கவிஞர் சுகுமாரன் வாசித்தார். அந்த அறிக்கையை இங்கு முழுமையாகத் தருகிறோம்

சுந்தர ராமசாமியின் முதலாம் நினைவு நாளையொட்டி நெய்தல் அமைப்பின் சார்பில் ஓர் எளிய இலக்கியக் கூட்டத்தை நண்பர் கிருஷ்ணன் ஏற்பாடு செய்திருந்தார்.தமிழ் மலையாள இலக்கிய உறவுகளை மையப் படுத்தி பேராசிரியர். டாக்டர்.கி.நாச்சிமுத்து, சுகுமாரன் இருவரும் உரை நிகழ்த்தினர். இலக்கியவாதிகளும் ஆர்வலர்களும் கலந்து கொண்ட அந்த நினைவு நாள் சந்திப்பு சுந்தர ராமசாமியின் நினைவைப் பேணும்வகையில் தொடர்ந்து செயல்பட ஊக்கமளித்தது.

சுந்தர ராமசாமியின் பங்களிப்பு எழுத்தாளர் என்ற நிலையில் மட்டும் ஒதுங்கி விடுவதல்ல. இலக்கியத்தின் வெவ்வேறு பிரிவுகளிலும் கலாச்சாரச் செயல்பாடுகளின் பல தளங்களிலும் அவரது ஆழமான அக்கறைகள் படர்ந்திருந்தன.சக மனிதனைப் பற்றிய பரிவு கொண்ட எவரும் வெறும் எழுத்தாளனாக மட்டுமே தன்னை முடக்கிக்கொள்வது இயலாது என்ற சமகால உண்மையை அதிகம் உணர்ந்தவராகவும் அதற்கிசையச் செயல்பட்டவராகவும் சுந்தர ராமசாமி இருந்தார்.இந்த உணர்வின் விளைவாக புதிய தலைமுறை
இலக்கியவாதிகளுடனும் வாசகர்களுடனும் தொடர்ந்து உரையாடல் நடத்துபவராகவும் இருந்தார். மூத்த எழுத்தாளர் ஒருவர் சமகால எழுத்துடனும் பண்பாட்டு நடவடிக்கைகளுடனும் கொள்ளும் உறவாக இதைக் குறிப்பிட வேண்டும்.அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கத் திரண்டவர்களில் பெரும்பான்மையோர் இளைய தலைமுறையைச் சேர்ந்தவர்களாகவே இருந்தார்கள் என்பது இந்த உறவின் நிரூபணம்.

எனவே சுந்தர ராமசாமியின் நினைவைப் போற்றும் விதத்தில் நிறுவப்படும் விருதை, புதிய தலைமுறையைச் சேர்ந்த படைப்பாளி ஒருவருக்கு வழங்குவது என்று முடிவு செய்யப்பட்டது. இன்றைய தலைமுறையைச் சேர்ந்த நாற்பது வயதுக்குட்பட்ட படைப்பாளி ஒருவருக்கு வழங்கலாம் என்றும் முதல் இரண்டு ஆண்டுகளுக்கு படைப்பாக்கங்களில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு மட்டுமாக விருது வழங்கலாம் என்றும் திருத்தங்கள் சேர்க்கப்பட்டன.நெய்தல் அமைப்பின் நிறுவனரான கிருஷ்ணன் விரும்பியதற்கிணங்க
மூன்று பேர் கொண்ட நடுவர் குழு உருவானது.மூவரும் தனித்தனியாகவும் இலக்கிய நண்பர்களுடனும் கலந்து உரையாடி விவாதங்கள் நடத்திய பின்னர் சுந்தர ராமசாமி விருது பற்றிய அறிவிப்பு ஜூலை மாதம் வெளியிடப்பட்டது. அதில் இரண்டு மாதக் காலத்துக்குள் பரிந்துரைகளை அனுப்பும்படி கேட்டுக்கொண்டிருந்தோம். இலக்கியத்தை சீரிய செயல்பாடாகக் கருதும் எழுத்தாளர்கள், வாசகர்கள், இலக்கிய ஆர்வலர்கள் எவரும் விருதுக்காகப் பரிந்துரை செய்யலாம் என்றும் அறிவித்திருந்தோம்.

இலக்கிய இதழ்களிலும் இணைய தளங்களிலுமாக வெளியிடப்பட்ட இந்த அறிவிப்புக்குக் கிடைத்த எதிர்வினை உற்சாகமூட்டக் கூடியதாகவே இருந்தது. கடிதங்கள் மூலமாகவும் குறுஞ்செய்திகளாகவும் தொலைபேசி வாயிலாகவும் வாய்மொழிப் பதிவாகவும்
பரிந்துரைகள் செய்யப்பட்டன.அவை அனைத்தும் பதிவு செய்யப்பட்டன.

விருது அறிவிப்பைத் தொடர்ந்து வந்த நாட்களில் பதிவு செய்யப்பட்ட எல்லாப் பரிந்துரைகளும் தேர்வுக்காக எடுத்துக்கொள்ளப்பட்டன. வாசகர்களும் ஆர்வலர்களும் பதிப்பாளர்களும் நண்பர்களும் பரிந்துரை செய்திருந்தனர். ஓரிரு எழுத்தாளர்கள் தங்களைத் தாங்களே பரிந்துரைத்திருந்தனர். சிலர் நண்பர்கள் வாயிலாக பத்துக்கு மேற்பட்ட பரிந்துரைக் கடிதங்களை
அனுப்பியிருந்தனர்.பத்தும் ஒரே கையெழுத்தில் இருந்தது குறிப்பிடத்தகுந்த செய்தி. இதுவரை நிறைய கவிதைகளை எழுதி வைத்துள்ள கவிஞர் ஒருவர் இந்த விருது தனக்கே வழங்கப்படவேண்டும் என்று கேட்டிருந்தார். விருதுத்தொகை மூலம் தன்னுடைய வறுமை நீங்குமென்றும் தமிழுக்கு ஒரு புதிய கவிஞர் கிடைப்பாரென்றும் உத்தரவாதமளித்திருந்தார். எழுதி வெளியான படைப்புளை முன்னிருத்தியே விருதுக்கான படைப்பாளியைத் தேர்ந்தெடுப்பது என்ற நடுவர் குழுவின் விதிமுறை ஒரு புதிய கவிஞரை
தமிழுலகுக்கு அறிமுகம் செய்யும் வாய்ப்பைத் தடை செய்து விட்டது.

நெய்தல் அமைப்புக்குக் கிடைத்திருந்த 41 பரிந்துரைகளுடன் நடுவர் குழுவின் பரிந்துரைகளும் சேர்த்து முதற்கட்டத் தேர்ந்தெடுப்பு நடைபெற்றது. இந்தக் கட்டத்தில் தேர்வுக்குரியவையாக இருந்த பெயர்களை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.அவை: யூமா.வாசுகி, ஜே.பி.சாணக்யா,திலகபாமா,·பீனிக்ஸ், மாலதி மைத்ரி,சல்மா, என்.ஸ்ரீராம், குமரி ஆதவன், பிரேம் - ரமேஷ், சு.வேணு கோபால், ஆத்மநாதன், இளவேனில், சு.தமிழ்ச்செல்வி, மகேஷ்குமார், ஷோபா சக்தி,பிரான்சிஸ் கிருபா,கண்மணி குணசேகரன்,மாரம்பாடி பாஸ்கர், மனுஷ்ய புத்திரன்,ஆ.இரா.வேங்கடா சலபதி, ஜோ.டி குரூஸ்.

இந்த வரிசையிலிருந்து நாற்பது வயதைக் கடந்த சிலரது பெயர்கள் நீக்கப் பட்டன.மிக அதிகமானவர்களால் பரிந்துரைக்கப்பட்டும் யூமா. வாசுகியின் பெயர் விலக்கப்பட்டதற்கு இந்த விதி காரணம்.படைப்பிலக்கியத்துக்கு வழங்கப்பட்டிருந்த முன்னுரிமை விதியால் ஆ.இரா.வேங்கடாசலபதி உள்ளிட்ட ஓரிரு பெயர்கள் விலக்கப்பட்டன.அச்சியற்றப்பட்டு வெளியாகாத படைப்பை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்வதில்லைஎன்ற விதியின் கீழ் ஒரு பெயர் நீக்கப்பட்டது.இதிலிருந்து இரண்டாம் கட்டப் பரிசீலனைக்கான புதிய பட்டியல் உருவாக்கப்பட்டது.அதில் இடம் பெற்றிருந்த பெயர்கள் வருமாறு. ஜே.பி.சாணக்யா, பிரான்சிஸ் கிருபா,மாலதி
மைத்ரி,சல்மா,என்.ஸ்ரீராம், ஜோ டி குரூஸ்,கண்மணி குணசேகரன், மனுஷ்யபுத்திரன்.

கிடைக்கப் பெற்ற பரிந்துரைகளின் எண்ணிக்கை அடிப்படையில் மூன்றாம் பட்டியல் உருவானது.அதில் இடம் பெற்றிருந்தவர்கள் சல்மா,மனுஷ்யபுத்திரன், பிரான்சிஸ் கிருபா,கண்மணி குணசேகரன் ஆகியோர்.பரிந்துரைகளின் மதிப்பீட்டின்படி பெற்றிருந்த புள்ளிகள் சார்ந்து இந்த வரிசை உருவானது. இந்த கட்டத்தில் மூவர் அடங்கிய நடுவர் குழுவின் பரிந்துரையும் கணக்கில் கொள்ளப்பட்டது. நடுவர் குழுவிலிருந்த இருவரின் பரிந்துரையில் ஜே.பி.சாணக்கியாவின் என்.ஸ்ரீராமின் பெயரும் இடம் பெற்றிருந்தன.அதைத்
தவிர விருதுக்குரியவர்களாக முன்வைக்கப்பட்ட பெயர்களில் மாறுதல் எதுவும் இருக்கவில்லை. இதுவரையிலான படைப்பாக்க முயற்சிகள்,படைப்புகளில் வெளிப்படும் பன்முக அக்கறைகள், படைப்பாக்கச் செயல்பாட்டுக்கான முனைப்பு ஆகிவற்றை முன்னிருத்தி விவாதம் நடத்தியதில் கண்மணி குணசேகரன் முன்னிலை பெற்றார்.அவரையே விருதுக்குரியவராகத் தேர்ந்தெடுப்பது என்ற தீர்மானத்தை மூவரும் ஏக மனதாக மேற்கொண்டேம். அந்த அடிப்படையில் திரு.கண்மணி குணசேகரனை 2007 ஆம் ஆண்டுக்கான 'சுந்தர ராமசாமி' விருது' பெறுபவராகத் தேர்வு செய்திருப்பதை நடுவர் குழுவின் சார்பில் மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறோம்.

கண்மணி குணசேகரன் வயது முப்பத்தி ஆறு, விருத்தாச்சலம் அருகிலுள்ள மணக்கொல்லை கிராமத்தில் பிறந்தவர். அரசு போக்குவரத்துக் கழகப் பணிமனையில் தொழிலாளி. இருபது வயது கல்லூரிப் பருவம் முதல் எழுதி வருபவர். தொண்ணூறுகளிலிருந்து கவனத்துக்குரிய பங்களிப்புகளை செய்து வருகிறார்.இரண்டு கவிதை நூல்கள் - தலைமுறைக் கோபம்,காற்றின் பாடல் - மூன்று சிறுகதைத் தொகுதிகள் உயிர்த்தண்ணீர்,ஆதண்டார் கோயில் குதிரை, வெள்ளெருக்கு, இரண்டு நாவல்கள் - கோரை,அஞ்சலை ஆகியவை கண்மணி குணசேகரனின் படைப்புகள்.



( கவிஞர் வினய சந்திரன், நெய்த்ல் கிருஷ்ணன்,நாஞ்சில் நாடன், சுகுமாரன், கண்மணி குணசேகரன், அரவிந்தன்)

கடலூர்,விருத்தாச்சலம் பகுதிகளை உள்ளடக்கிய நடுநாட்டு மனித வாழ்க்கையே கண்மணி குணசேகரனின் புனைகளம்.விவசாயத்
தொழிலாளிகளின் எழுதித் தீராத துன்பத்தையே குணசேகரன் படைப்புகளின் பொருளாக்குகிறார்.மண் சார்ந்த வாழ்க்கை என்பதனால் எதார்த்தவாதத்தை தன்னுடைய படைப்பு அழகியலாகக் கொண்டிருக்கிறார் என்று குறிப்பிடுவது இந்த எழுத்தை வகைப்படுத்த உதவும் ஓர் அடையாளம். இந்த அடையாளத்திலிருந்து தொடங்கி பெரும் பரப்பாக விரிவடையும் படைப்பாக்கம் என்று அவருடைய இரு நாவல்களை முன்வைத்துப் பேசலாம். இதே இயல்பைக் கொண்டிருப்பவை இவரது சிறுகதைகளும். அறியப்படாத
களத்தையும் சூழலையும் சம கால இலக்கியத்தில் முதன்மை பெறச் செய்யும் படைப்பாற்றலுக்காக கண்மணி குணசேகரன் இந்த ஆண்டுக்குரிய 'சுந்தர ராமசாமி' விருதைப் பெறுகிறார்.அவருக்கு வாழ்த்துக்கள்.இந்தத் தேர்வுக்கு ஊக்கமளித்த அனைவருக்கும் நன்றி.-
***************

நிகழ்ச்சியில் மலையாளக் கவிஞர் வினயசந்திரன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு தற்கால மலையாளக் கவிதைகளின் போக்கு பற்றி உரையாற்றினார். நாஞ்சில் நாடன் கண்மணி குணசேகரனுக்கு விருது வழங்கி சிறப்புரை ஆற்றினார். குணசேகரன் தனது ஏற்புரையில் தனது வாழ்வின் பின்ணியில் தனது படைப்பு முயற்சிகள் பற்றிச் சுவையாக விவரித்தார். விருது வழங்கும் முயற்சி உருவான விதத்தை நெய்தல் கிருஷ்ணன் தனது வரவேற்புரையில் விளக்கினார். சு.ரா.வின் பெயரில் விருது வழங்குவதில் உள்ள முகியத்துவத்தை அரவிந்தன் தனது நிறைவுரையில் குறிப்பிட்டார்.

நாகர்கோவில் மேற்கு சுழற்சங்கம் விழாவை நடத்தப் பெருமளவில் உதவிபுரிந்தது.
நன்றி ‍திண்ணை